பதிவு செய்த நாள்
01
செப்
2020
05:09
திருப்பூர்: கோவில்களில் பக்தர் தரிசனம் அனுமதிக்கப்படுவதால், ஊரடங்கு நீங்கி விரைவில் இயல்புநிலை திரும்புமென, பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்று பரவ துவங்கியதால், சமூக பரவலை தடுக்கும் முயற்சியாக, வழிபாட்டு தலங்களில், பக்தர் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு தளர்த்திய பிறகும், கடந்த இரண்டு மாதங்களாக, ’இ-பாஸ்’ நடைமுறை மற்றும் ஞாயிறு முழு முடக்கத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.ஞாயிறு முடக்கத்தால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது; சனிக்கிழமை கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்கு பிறகு, ’இ-பாஸ்’ நடைமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஞாயிறு முழு ஊரடங்கு நடைமுறையும் ரத்தாகியுள்ளது. பஸ் போக்குவரத்தும் துவங்குவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஞாயிறு முழு முடக்கும் என்பது, கொரோனாவை விட கொடிய ஒன்றாக மக்களை அழுத்திக்கொண்டிருந்தது. ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதுடன், 165 நாட்களாக மூடப்பட்ட வழிபாட்டு தலங்களை திறந்து, பக்தர் தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எல்லாம் வல்ல இறையருளால், கொரோனா மறைந்து விரைவில் இயல்புநிலை திரும்புமென, மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து கோவில்களிலும் இன்று முதல் பக்தர் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. அதற்காக, கோவில் வளாகங்கள் நேற்றே தயார்படுத்தப்பட்டன. வளாகத்தை சுத்தம் செய்து, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.பக்தர் சமூக இடைவெளியுடன் வந்து செல்ல, வட்ட குறியீடு வரையும் பணியும் நடந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு, கோவில்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், நாட்டில் இருந்தே கொரோனா விரட்டியடிக்கப்படும் என, மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பல்லடத்தில்...: பல்லடம், பொங்காளியம்மன் கோவில், ஸ்ரீ விநாயகர் பால தண்டாயுதபாணி கோவில், அங்காளம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளில் நேற்று ஈடுபட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், கட்டாயம் முக கவசம் அணிவதுடன், கைகளை கழுவி, சானிடைசர் பயன்படுத்திய பின்பே அனுமதிக்கப்படுவர்.