பதிவு செய்த நாள்
16
செப்
2020
09:09
தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் பங்கேற்ற பிரதோஷ வழிபாடு நடந்தது.
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக, தஞ்சை பெரிய கோவில், மார்ச், 18ம் தேதி மூடப்பட்டது. பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், வழக்கமாக நடைபெறும், நான்கு கால பூஜைகள் நடந்து வந்தன. மார்ச் 21ம் தேதி, பக்தர்கள் பங்கேற்காமல், முதல் பிரதோஷம் நடந்தது. அதன்பின், 12 பிரதோஷங்கள், பக்தர்களின்றி நடந்தன. பணியாளர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் மட்டும் இருந்தனர்.
கோவில்களை பக்தர்கள் வழிபாட்டிற்கு திறக்க, சமீபத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று நடந்த பிரதோஷ வழிபாட்டில், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பெரிய கோவில் நுழைவு வாயிலில், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தபிறகே, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும், சமூக இடைவெளியுடன் அமர்ந்து, தரிசனம் செய்தனர். பால், மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்களால், நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.