பதிவு செய்த நாள்
21
மே
2012
11:05
மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலை, தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க, இந்திய தொல்பொருள் ஆய்வு துறை முடிவெடுத்து உள்ளது. இதற்கு, ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து உள்ளன. மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் ஸ்தலசயனப் பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இங்கு, ஸ்தலசயனப் பெருமாள், நிலமங்கை தாயார் எழுந்தருளி அருள்புரிகின்றனர். ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராஜசிம்ம வர்ம பல்லவன், கடற்கரையில் கருங்கல்லில் கோவில் கட்டினார்.கடற்கரைக்கு அருகில் இருந்ததால், நாளடைவில் கடல்நீர் புகுந்து பாதிக்கப்படும் ஆபத்து இருந்தது. எனவே, விஜயநகரப் பேரரசு காலத்தில் கிருஷ்ணராஜ தேவராயர், நகரின் மையப்பகுதியில், புதிய கோவிலை கட்டினார். 108 வைணவ திருத்தலங்களில் 63வது தலமாக புகழ் பெற்றது. கோவிலின் பின்புறத்தில் கிருஷ்ணர் மண்டபம், அர்ஜூணன் தபசு ஆகிய புராதான சின்னங்கள் அமைந்து உள்ளன. கோவில் வளாகம் சீரழிவு இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள புராதான பகுதிகளை மட்டுமே பராமரிக்கிறது. ஸ்தலசயனப்பெருமாள் கோவில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தை பராமரிக்க அறநிலைய துறை போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கோவில் வளாகம் சீரழிந்து வருகிறது. சுற்றுலா வாகனங்கள், கோவில் வளாத்திலேயே நிறுத்தப்படுகின்றன. பொதுமக்களும் கோவிலைச் சுற்றி அசுத்தப் படுத்துகின்றனர். இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை இக்கோவிலை பராமரித்து பாதுகாக்க, 2004ம் ஆண்டு, மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. தற்போது கோவிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்து தனது கட்டுப்பாட்டில் பராமரிக்க, நேற்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கருத்து தெரிவிக்கலாம் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய அரசிதழ் எண். எஸ்.ஓ.79(இ) ஜனவரி 2004ல் வெளியிடப்பட்ட முன்னறிவிப்பு, வழக்கு எண்கள் டபிள்யூ.பி. 5470/2004 மற்றும் டபிள்யூ.பி.26061/2008 ஆகியவற்றில் வழங்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற ஆணையின்படி, மாமல்லபுரம் மற்றும் சுற்றியுள்ள பொதுமக்களின் கவனத்திற்காக தற்போது வெளியிடப் படுகிறது. மாமல்லபுரத்தில் தமிழ்நாடு இந்து அறநிலைய துறையின் கீழ் உள்ள அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோவிலை இந்திய தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க, இந்திய அரசால் முடிவு செய்யப் பட்டு உள்ளது. இது குறித்த பொதுமக்கள், கருத்துக்களை எழுத்து மூலமாக, இரண்டு மாதத்திற்குள், சென்னை வட்ட தொல்பொருள் ஆய்வு துறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்க வலியுருத்துவோம்!கோவில் புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டால், அதன் சுற்றுப்புறத்தில், குறிப்பிட்ட தொலைவிற்குள் புதிய கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்படும். இதனால், கோவில் முழுமையாக பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கும் வாய்ப்பு உருவாகும். அதே நேரத்தில், கோவிலின் முக்கியத்துவம் அதிகரித்து, இன்னும் அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் வாய்ப்பு உள்ளது. தற்போது, கோவிலை சுற்றி மிக உயரமான கட்டடங்கள் ஏராளமாக உள்ளன. தற்போதைக்கு இந்த கட்டடங்களுக்கு பாதிப்பில்லை என்றாலும், பிற்காலத்தில் அகற்றும் நிலை ஏற்படலாம். இதனால், அதன் அருகில் தொழில் நடத்துபவர்கள் எதிர்க்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து, கோவில் செயல் அலுவலர், வஜ்ரவேலுவிடம் கேட்டபோது, ""இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, இந்த கோவிலை தேசிய சின்னமாக அறிவிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்கள் துறையிடம் ஆலோசித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். பொதுமக்களையும் எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்துவோம், என்றார்.
வழிபாடு பாதிக்கப்படுமா? ஓட்டல்கள் சங்கத்தின், மாவட்ட துணை தலைவர், பாண்டியன் கூறும்போது, ""இந்த கோவில் தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் இருந்தால், காட்சிப்பொருளாக இருக்குமே தவிர, வழிபாட்டு தலமாக இருக்க வாய்ப்பில்லை. எனவே கையகப்படுத்தக் கூடாது, என்றார்.இந்த கருத்து, அந்த பகுதியில் தொழில் முனைவோருடையது, அவர்கள் பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக இதை எதிர்க்கின்றனர் என, மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். அவர்களின் கருத்துப் படி,"தொல்பொருள் துறை எடுத்துக்கொள்வதற்கும், ஆன்மிக நடைமுறைகளுக்கும் தொடர்பில்லை. பராமரிப்பு இன்னும் சிறப்பாகவே இருக்கும், என தெரிவிக்கின்றனர். அதற்கு உதாரணமாக, ஏற்கனவே அத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் போன்றவற்றை சுட்டி காட்டுகின்றனர்.