சக்ர ஸ்நானத்துடன் திருமலை பிரம்மோற்சவ விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2020 09:09
திருப்பதி : சக்ர ஸ்நானத்துடன் திருமலை பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது.
திருமலையில் நடைபெறும் திருவிழாக்களில் பிரம்மோற்சவ விழா விமரிசையானதாகும். பல லட்சம் பக்தர்கள் கூடுவர்.சுவாமி விதவிதமான வாகனத்தில் மாடவீதியில் வலம்வரும்போது காத்திருந்து பக்தர்கள் தரிசிப்பர்.சுவாமிக்கு முன்னதாக பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது கண்கொள்ளாக்காட்சியாகும். கொரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக இந்த வருட பிரம்மோற்சவ விழா பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்குள் ஏகாந்தமாக நடைபெற்றது.ஒன்பது நாட்களும் உற்சவரான மலையப்ப சுவாமி விதம் விதமான வாகனங்களில் கோவிலுக்குள் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். விழா நடத்தும் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மட்டும் கலந்து கொண்டனர்.
ஒன்பதாவது நாளான நேற்று சக்ர ஸ்நானம் கோவிலின் அருகில் உள்ள புஷ்கரணியில் நடைபெறுவது ரத்து செய்யப்பட்டு கோவிலுக்குள் இதற்காகவே சிறிய அளவில் தெப்பம் போல தொட்டி கட்டி அதில் சக்ர ஸ்நானத்தை நடத்தினர். மலையப்பசுவாமி தேவியருடன் எழுந்தருளினார் அவரது அம்சமாக சக்கர வடிவிலான சக்ரத்தாழ்வாரும் எழுந்தருளினார். பால்,தயிர்,சந்தனம்,இளநீர் உள்ளீட்ட பல்வேறு மங்கலப் பொருட்களால் அபிேஷகம் நடத்தப்பட்து.பின்னர் அர்ச்சகர்கள் புதிதாக கட்டிய தொட்டியில் நிரப்பப்பட்ட தண்ணீரில் சக்கரத்துடன் நீராடினர்.இந்த நிகழ்வுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. மூன்று வருடத்திற்கு ஒரு முறை இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும் அந்த வகையில் இந்த வருடம் இரண்டாவது நவராத்திரி பிரம்மோற்சவம் அடுத்து வரும் அக்டோபர் மாதம் 16 ந்தேதி துவங்கி 24 ந்தேதி வரை நடைபெறுகிறது.இந்த இரண்டாவது பிரம்மோற்சவம் வழக்கம் போல பக்தர்களுடன் கொண்டாப்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.