மதுரை: உசிலம்பட்டி குறிஞ்சி நகர் வாசிமலை தொடர் அடிவாரத்தில் மூன்று இடங்களில்- 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். காந்திராஜன் கூறியதாவது: குறிஞ்சிநகர் பளியர் பழங்குடி தலைவர் வேலுச்சாமி வழிகாட்டுதல் படி சோலை, சோலை பாலு உடன் ஆய்வு செய்தேன். அங்குள்ள செம்பாறை புடவு பாறையில் மூன்று காலங்களை சேர்ந்த எட்டுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளன. முதல் தொகுதியில் இரு மனித உருவங்கள் தலைக்கவசம், காதணிகளுடன் கைகளை விரித்த நிலையில் வெள்ளை வண்ணம் தீட்டிய கோட்டோவியமாக உள்ளன. இதற்கு இடையில் மான் உருவம் தீட்டியுள்ளனர்.
இக்காட்சி மானை வேட்டையாடாமல் அதனுடன் உறவை வெளிப்படுத்தும்படி உள்ளது. கன்னிமார் கோயில் பாறையில் மூன்று மான்களை வேடர்கள் வேட்டையாடும் ஓவியம் உள்ளது. அருகே மனித உருவங்கள் ஐந்து நிலையில் ஆடுவது போல் உள்ளது.இங்கு பிற்கால சமய குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. பெத்தாம்பாறையில் மான், மாடு, யானை உருவங்கள் உள்ளது. தெற்கில் சிறிய வேட்டை காட்சி காட்டப்பட்டுள்ளது. இவை இரண்டும் தொன்மையானஓவியங்கள்.இங்கு ஏற்கனவே தொல்லியல் தடயங்கள், பாறை ஓவியங்கள் கண்டறிந்த நிலையில் மீண்டும் ஓவியங்கள் கிடைத்துள்ளன. சேர நாடு, மதுரைக்கு இடையில் உள்ள மலையின் செம்பாறை புடவு பளியர்கள் வழிபாட்டு தலமாக இருந்துள்ளது. இங்கு கூடுதல் கள ஆய்வு செய்தால் அரிய தகவல்கள் கிடைக்கும் என்றார்.