பதிவு செய்த நாள்
28
செப்
2020
09:09
ஈரோடு: கோவிந்தா கோஷம் முழங்க, ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேரோட்டம், கோலாகலமாக நடந்தது.
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில், புரட்டாசி பிரம்மோற்சவ தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம் நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கஸ்தூரி அரங்கநாதர் உற்சவர் எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்கு பின் தேரோட்டம் தொடங்கியது. காலை, 9:00 மணிக்கு, எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, ராமலிங்கம், எஸ்.பி., தங்கதுரை, கோவில் செயல் அலுவலர் கங்காதரன் ஆகியோர், வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தர். அதைத் தொடர்ந்து திரளான பக்தர்கள், வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். கோவிந்தா கோஷம் முழங்க, தேரை இழுத்தனர். 10:30 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. வழி நெடுகிலும் நின்ற பக்தர்கள், தரிசனம் செய்தனர். பி.எஸ்., பார்க் பகுதிக்கு தேர் வந்தபோது, அங்கு வியாபார நிறுவனங்கள் நடத்தி வரும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தேர் அந்த இடத்தை கடந்த போது, எழுந்து நின்று மரியாதை செய்தனர். தேரோட்டத்தில் பக்தர்கள் தேங்காய் உடைக்க, ஆரத்தி காட்ட அனுமதிக்கவில்லை. கோவில் பிரசாதம் மட்டுமின்றி, தனி நபர் பிரசாதம் கொடுக்கவும் அனுமதிக்கப்படவில்லை.