காஞ்சி மகாசுவாமிகளிடம், ‘‘எவ்வளவோ ஸ்லோகங்கள் சொல்கிறேன். பல ஆன்மிக புத்தகங்களைப் படிக்கிறேன். ஆனால் என் வாழ்வில் ஆன்மிக முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. துன்பங்களும் குறைந்தபாடில்லை’’ என வருத்தப்பட்டார் பக்தர் ஒருவர். கருணையுடன் பார்த்தபடி, ‘‘ துன்பம் கண்டு சிறிதும் கலங்காதே! அதன் மூலம் முற்பிறவியில் நீ செய்த கர்ம வினைகள் தொலைகின்றன. மனதில் வைராக்கியம் ஏற்படவே கடவுள் கஷ்டங்களைக் கொடுக்கிறார் ‘வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களைப் பொறுப்பதும், மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் வாழ்வதும் தவ வாழ்வுக்கு சமம்’ என்கிறார் திருவள்ளுவர். வாழ்வில் முன்னேறவில்லை என்கிறாயே... படித்த ஆன்மிக விஷயங்களை சரிவர கடைபிடித்தாயா... வழிபாட்டின் போது ஸ்லோகங்களை ஒருமித்த மனதுடன் சொன்னாயா... கொஞ்சம் யோசித்துப் பார். நமக்கு நோய் வந்தால் மருத்துவரின் உதவியை நாடுகிறோம். பரிசோதித்துப் பார்த்து அதற்கான மருந்தை அவர் கொடுப்பார். என்ன மருந்து, எப்படி வேலை செய்கிறது, எந்தக் கம்பெனியில் தயாரிக்கப்பட்டது என ஒருவன் தெரிந்து கொண்டால் நோய் குணமாகுமா... நம்பிக்கையுடன் மருந்தை நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும். அதுதான் முக்கியம். யோகாசனம் செய்தால் உடல் நலத்துடன் வாழலாம் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காக யோகாசன புத்தகங்களை படித்து ஆசனம் செய்யும் முறைகளை தெரிந்துகொண்டால் போதுமா... அக்கறையுடன் உடலை வளைத்து பயிற்சி செய்தால் தானே பலன் கிடைக்கும். ஆன்மிகமும் அப்படித்தான். ஆன்மிக பெரியவர்களிடம் நல்ல விஷயங்களை கேட்டால் போதாது. அவற்றில் பயிற்சி வேண்டும். பெயரளவில் முயற்சித்து விட்டு பலன் கிடைக்கவில்லை என சொல்வதில் அர்த்தமில்லை. இனியாவது நம்பிக்கையுடன் கடவுளின் திருநாமங்களை ஜபித்து வா. ஸ்லோகம் சொல்லும் போது கவனம் சிதறல் வேண்டாம். மன ஒருமைப்பாட்டுடன் பக்தியில் ஈடுபடு. துன்பம் பறந்தோடும். வாழ்வில் நலம் பெறுவாய்’’ என ஆசியளித்தார் மகாசுவாமிகள். ஆனந்தக் கண்ணீருடன் விடை பெற்றார் பக்தர்.