கேரளாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது குதிரன் மலை. திருச்சூருக்கும் பாலக்காட்டுக்கும் இடையில் உள்ள இங்குதான் கோயில் கொண்டிருக்கிறார். அஸ்வாரூட சாஸ்தா. தமிழில் குதிரை வாகன சாஸ்தா. குதிரைமேல் சாஸ்தா இங்கு வந்த கதையைப் பார்ப்போம். மன்னர்களைப் பழிவாங்க சபதம் செய்திருந்த பரசுராமர், தன் கோபம் தணிந்தபின், அமைதியாக இருக்க விரும்பி கோடரியை கடலில் வீசி எறிந்தார். அது கன்னியாகுமரியை அடுத்திருந்த கடல்பகுதியில் விழுந்தது. பின்னர் அந்தக் கடல்பகுதி கேரளத்தை நோக்கி வந்து மறைந்துவிட்டது. கோடரியைக் கண்டெடுக்க விரும்பிய பரசுராமர், மறைந்த கடல் பகுதியை பல துண்டுகளாகப் பிரித்தார். அதில் ஒன்று குதிரன் மலை.
பரசுராமரால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட சாஸ்தா குதிரைமீது ஆரோகணித்து இருப்பதால் குதிரைவீரன் சாஸ்தா என்றழைக்கப்பட்டு பின் குதிரன் சாஸ்தா என்று வழங்கப்படுகிறார். இவர் இவ்வழியாகச் செல்வோர்க்குப் பாதுகாவலராக விளங்குவதாக ஓர் ஐதிகம் நிலவுகிறது. அதனால், இவ்வழியாக வண்டி, வாகனங்களில் செல்வோர் மற்றும் நடைவழிப் பயணிகள் கோயிலுக்குக் காணிக்கையாக நாணயங்களைப் போட்டுவிட்டு - வேகமாக பஸ்ஸில் செல்வோர் காசுகளை வீசி எறிந்துவிட்டுப் போகிறார்கள். இந்தக் காசுகளைச் சேகரித்துக் கொள்ளும் உரிமை ஆண்டொன்றுக்குப் பல லட்ச ரூபாய் ஏலம் போகிறது என்று கூறுகிறார்கள். நமது ஆன்மா என்னும் குதிரையைச் செலுத்தும் குதிரையோட்டியாக விளங்குகிறார், சாஸ்தா.