ராஜ ராஜ சோழன் காலத்தில் தமிழகம் மட்டுமின்றி, தென்னிந்தியா முழுவதும் அவனது ஆட்சியின் கீழ் இருந்தது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை எழுப்பி சாதனை படைத்த அருளாளன் ராஜராஜன், அவனது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் சிவாலயம் எழுப்பினான். அதில் ஒன்று, தொண்டை நாட்டில் செய்யாறை அடுத்துள்ள வேளியநல்லூர் கிராமத்தில் உள்ள மகாதேவேஸ்வரர் கோயில். இது ஒரு குன்றின் மீது கட்டப்பட்ட மலைக்கோயில். முற்றிலும் கற்றளி கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நிமிடத்தில் ஏறி விடக்கூடிய சிறிய குன்று தான். ஏறுவதற்கு எளிதான மலைப்பாதை உள்ளது. மலை மீதுள்ள கோயிலில் மதில்கள், கருங்கல், தூண்களுடன் முன் மண்டபம், பிராகாரம், மூலவர் சன்னதி எல்லாம் உள்ளது. கோயிலில் உள்ள கல்வெட்டுகளைக் கொண்டு இது ராஜராஜன் காலத்தியது என்பதை அறிய முடிகிறது. இக்கோயில் 1012 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக கல்வெட்டிலிருந்து தெரியவருகிறது. மலைக்கோயிலின் வெளிச்சுற்றில் ஓர் அழகிய சுனை உள்ளது. கோடைக்காலத்திலும் இதில் நீர் வற்றாதாம். சுனையில் அல்லி மலர்வது ஓர் அதிசயம். காமதேனு சிவலிங்கத்திற்குப் பால் சொரிந்து அபிஷேகம் செய்வதுபோல் அமைந்துள்ள புடைப்புச் சிற்பம், ஒரு காலத்தில் இக்கோயிலில் பல அழகிய சிற்பங்கள் இருந்துள்ளதற்குச் சான்று. கோயில் இறைவியின் பெயர் திரிபுரசுந்தரி. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற இங்கு சென்று வழிபடுகின்றனர்.