பதிவு செய்த நாள்
14
அக்
2020
04:10
ஒரு மனிதனின் கவுரவம், புத்திப்பூர்வமான நம்பிக்கைகளுக்கு ஏற்ப எப்போதும் வாழ்வதில் தான் இருக்கிறது. நம்முடைய நூல்களின் புனித விஷயங்களை புரிந்து கொண்டு, அதனை முதலில் பின்பற்றி நடந்து கொள்வதுடன், அதன் தத்துவத்தை பிறருக்கு எடுத்துரைக்க அர்ப்பணித்துக் கொள்வதே ஒவ்வொருவரின் தலையாய கடமை. மனித மனத்தினால் உருவமற்ற கடவுளை நினைக்க முடியாது, அதனால் தான் அவருக்கு ஓர் உருவம் கொடுத்து நாம் அந்தக் கடவுளை வழிபடுகிறோம். கடவுள் புத்தியினால் அறியப்படுகிற பொருளல்ல, கடவுள் அனைவரிடத்திலும் இருக்கின்ற உயிர்த் தத்துவமாகும். எண்ணங்கள் உற்பத்தியாகும் வேகத்தை நமது பிடிக்குள் கொண்டு வந்து, அவை செல்லும் திசையை விரும்பியபடி திருப்பும் ஆற்றல் பெற்றால் தான் நாம் முழுமையான மனிதனாகி விட்டதாகப் பெருமை கொள்ளலாம்.
மனமும், புத்தியும் தூய்மையாய் இருக்கும் மனிதரிடமிருந்து வெளிவரும் கருத்துக்கள் பிரகாசமாய் இருக்கும். இந்த உணர்வு எவருக்கு உச்சத்தை அடைகிறதோ, அவர்களே மகானாகவும், தீர்க்கதரிசியாவும் மாறுகின்றனர். தினமும் சிறிது நேரம் காலையிலும், மாலையிலும் அமர்ந்து தியானம் செய்தால், அது படிப்பில் அக்கறை செலுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தும். பணம் கிடைக்கும் போது சேமித்து வைத்தால் தான், தேவைப்படும் போது எடுக்க முடியும். அதுபோல், நம் அன்றாடக் கணக்கில் தியானத்தையும் சேர்த்து வைத்தால், மனதைப் பக்குவப்படுத்த வேண்டுமென்று நினைக்கும் சமயத்தில் அது சேமிப்பு பணம் போல் உதவும், வாழ்க்கையும் சீர்படும்.
வேதம் நம்மைப் பற்றிய அறிவை நமக்கே தருவதாகும். நாம் இருக்கும் வரையில் வேதமும் இருக்கும், இந்த அறிவு அழிவில்லாததாகும். நல்ல உள்ளம் படைத்தவர்கள் பிறரிடம் அன்பு செலுத்தி பழகலாம். ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுப்பது மட்டும் தானம் இல்லை. ஆண்டவன் நமக்கு எந்த செல்வத்தைக் கொடுக்கிறாரோ, அதை நல்ல முறையில் பயன்படுத்தி நல்லவராய் வாழ்ந்து நன்மைகளைப் பெற வேண்டும்.இறைவன் நம் மனமாகிய வீட்டிலிருந்து இயங்குகிறான். அவன் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அவனது அருள் நமது வாழ்க்கையில் பல்வேறு பலன்களைத் தருகிறது.
எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கங்களை நடுநிலையினின்று மதிப்பிடும் பழக்கம் தெய்வீக வாழ்க்கையின் முதல்படி. உண்மை பேசுபவனாக, நல்லவனாக, அனைவரையும் நேசிப்பவனாக, தன்னலமற்றவனாக, பெருந்தன்மையுள்ளவனாக, விட்டுக் கொடுப்பவனாக, இனிமையுள்ளவனாக, உற்சாகமுள்ளவனாக இருப்பதே ஒரு மனிதனின் லட்சியமாக இருக்க வேண்டும். கடந்த பல பிறவிகளில் கிடைத்த அனுபவங்களின் தொகுப்பு தான் இந்தப்பிறவி. அதை வைத்துக் கொண்டு இதற்கு மேல் முன்னேறும் வழியைப் பார்க்க வேண்டும். வந்த வழியையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் செவிகொடுத்துக் கேட்டால், இறைவன் உங்கள் விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை, அச்சத்தை வென்ற துணிவைப் பாராட்டிச் சிரிப்பது உங்கள் காதில் ஒலிக்கும்.
அந்தரங்க குழப்பங்கள் மீது ஒருவருக்கு இருக்கும் கட்டுப்பாட்டை கொண்டு தான், ஒருவரின் வாழ்க்கை வெற்றியும், சந்தோஷமும் நிர்ணயிக்கப் படுகிறது. குளிர்காலத்தில் மனத்தைத் தண்டிக்க ஒரு கடுமையான முறை உள்ளது. விடியற்காலையில் தண்ணீரில் குளிப்பதே அந்த முறை. அறிவின் நம்பிக்கையிலும் உணர்ச்சியின் தரத்திலும் குணத்திலும் உள்ள வேறுபாடுகளைக் கொண்டு தான் மனித இனத்தின் பாகுபாடுகள் உருவாக்கப்படுகிறது. ஒரு மனிதனின் எண்ணத்திற்கேற்ப உலக வாழ்க்கை அமையும்.