உத்திரம் 2, 3 4ம் பாதம் : ராசிநாதன் புதனின் உச்ச பலத்தால் விவேகமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீ்ர்கள். நட்சத்திர அதிபதி சூரியன் 2ல் நீசம் பெறுவதால் அவசரப்பட்டு பேசும் வார்த்தைகள் உங்களுக்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புண்டு. அநாவசியமாகப் பேசாமல் அவசியத்திற்கு மட்டும் பேசுவது நல்லது. கவுரவத்திற்காக பணச் செலவு அதிகரிக்கும். சேமிப்பில் ஈடுபடுவதால் வீண் செலவை குறைக்க இயலும். புதனின் உச்ச பலம் மனநிலையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். குழப்பம் அகன்று மனதில் தெளிவு பிறக்கும். இதனால் பணியில் திருப்தியுடன் ஈடுபடுவீர்கள். மற்றவர் குறைகளை வெளிப்படையாக பேசி சிலரின் கோபத்திற்கு ஆளாக நேரலாம். குடும்பத்தில் சலசலப்புக்கு மத்தியில் கலகலப்பும் இருந்து வரும். உறவினரால் குடும்பப் பிரச்னை உருவாகலாம். பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணும் அதே நேரத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். உடன்பிறந்தோரின் செயல்களில் உடன்பாடு இல்லையென்றாலும், உங்களுக்குத் தகுந்தபடி மாற்றியமைத்து கொள்வீர்கள். வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். மாணவர்கள் முன்னேற்றம் பெற எழுத்துப்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். உங்களது ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையும். தியானம், யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. வாழ்க்கைத்துணையின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். தொழிலதிபர்கள் இடைத்தரகர்களை நம்பாமல் இருப்பது அவசியம். உங்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் நபர்களை அடையாளம் காண்பீர்கள். தொழில் தவறுகளை உணர்ந்து அதற்கேற்ப மாற்றிக்கொள்ள முயற்சிப்பீர்கள். பணியாளர்கள் அதிகாரிகளின் மதிப்பை பெறுவர். பரிகாரம் : பறவைகளுக்கு தானியத்தை உணவாக அளியுங்கள். சந்திராஷ்டம நாள் : அக். 30, 31 ........................ ஹஸ்தம் ராசிநாதன் புதனின் உச்ச பலம் சிறப்பாக செயல்பட வைக்கும். எண்ணியிருந்த பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். லாபம் நிதானமாக வருவது போல் தோன்றினாலும் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி குடியிருக்கும். அகத்தின் அழகை முகத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களோடு பேசினால் போதும், கவலை தீரும் என்ற எண்ணத்தில் பலரும் நாடி வருவர். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வருவீர்கள். அவ்வப்போது திடீரென தடைகள் முளைத்தாலும் அவற்றை முறியபடிப்பீர்கள். வீண் பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தாலும் அவற்றை நேர்த்தியாக சமாளித்து நற்பெயர் காண்பீர்கள். பிரச்னைக்குரிய நேரத்தில் எதிராளியைக் குழப்பி விட்டு வெற்றி காண்பீர்கள். அரசு வகையில் உதவி பெற காத்திருப்போருக்கு உடனடி பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நவம்பர் மாத துவக்கத்தில் குடும்பத்தினரோடு வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புண்டு. சிறப்பான பண வரவினைக் காண்பீர்கள். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றலாம். தகவல் தொடர்பு சாதனங்களால் கூடுதல் நன்மை கிடைக்கும். வாகனங்களில் பராமரிப்பு செலவு அதிகரிக்கலாம். மாணவர்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் முன்னேற்றம் காண முடியும். பிள்ளைகளின் விருப்பத்திற்காக கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். வாழ்க்கைத்துணையோடு இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். தர்ம காரியங்களில் முன்நின்று செயல்படுவீர்கள். சுயதொழில் செய்வோர் முன்னேற்றம் காண்பர். பணியாளர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வர். குடும்ப பெரியவர்களை ஆலோசித்து எடுக்கும் முடிவு வெற்றி பெறும். பூர்வீக சொத்து பிரச்னையில் நல்ல முடிவு கிடைக்கும். சொத்து வாங்கும் முயற்சியில் கடனுதவி கிட்டும். நற்பலன்களைக் காணும் நேரம் இது. பரிகாரம் : ஆலய வாசலில் இருக்கும் சாதுக்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். சந்திராஷ்டம நாள் : அக். 31, நவ. 1
சித்திரை 1, 2ம் பாதம் : ராசிநாதன் புதன் உச்சம் பெற்றாலும் நட்சத்திர அதிபதி செவ்வாயின் வக்ர சஞ்சாரம் சிரமத்தைத் தரலாம். அக்.26 வரை செயல்களில் தடையை சந்திப்பீ்ர்கள். திட்டமிட்டு செயல்பட்டாலும் எதிர்பாராத இடைஞ்சல்களால் லேசான தடுமாற்றம் ஏற்படும். அக்டோபர் மாத இறுதியில் தவறைக் கண்டறிந்து செயல்திட்டத்தை மாற்றி வெற்றி காண்பீ்ரகள். கறாரான பேச்சு உங்கள் பலம் என்றாலும் இடம், பொருள் அறிந்து பேசுவது நல்லது. குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் கலந்திருக்கும். நம்பிக்கைக்கு உரியவர்களின் துணையுடன் முக்கிய விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். சேமிப்பு உயரும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், பர்னிச்சர் சாமான்களை வாங்குவீர்கள். அக்டோபர் மாத இறுதியில் குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புண்டு. சுபவிஷயங்கள் சம்பந்தமாக உடன்பிறந்தோரின் குடும்பத்தாருக்கு உதவ வேண்டிய சூழல் வரும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் மிகுந்த பயன் தரும். மாணவர்கள் முன்னேற்றம் காண கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. பிரயாணத்தின்போது வீண் செலவு அதிகரிக்கும்.உறவினர்களால் தர்ம சங்கடமான சூழலுக்கு ஆளாக நேரலாம். பிள்ளைகளின் செயல்பாடு பெருமிதம் கொள்ளச் செய்யும். வாழ்க்கைத்துணையின் செயல்களுக்குத் துணை நிற்க வேண்டியிருக்கும். இயலாதவர்களுக்கு உதவி செய்து நிம்மதி காண்பீர்கள். தொழிலில் சிறப்பான வெற்றியைக் காணும் நேரம் இது. எதிர்பார்க்கும் லாபத்தினை நிச்சயம் காண்பீர்கள். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். பரிகாரம் : சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுவது நல்லது. சந்திராஷ்டம நாள் : நவ. 1
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »