மூலம்: ராசிநாதன் குரு ஆட்சி பலத்துடன் சஞ்சரிப்பதால் ஏழரைச் சனியின் தாக்கம் குறைந்திருக்கும். ஆயினும் நட்சத்திர அதிபதி கேது 12ல் உச்ச பலம் பெறுவதால் அலைச்சல் அதிகமாகும். மனதில் தத்துவ சிந்தனை அதிகமாகும். அவ்வப்போது உண்டாகும் விரக்தி எண்ணங்களை விரட்டினால் வெற்றி நிச்சயம். எளிதில் முடிந்துவிடும் என எதிர்பார்த்த விஷயங்களில் இழுபறி நீடிக்கும். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருப்பதால் வருத்தம் கொள்வீர்கள். எதிலும் அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். ‘பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன’ கதையாக நல்லது என நினைத்து உதவி செய்யப் போய் சிக்கலில் மாட்ட வாய்ப்புண்டு. தேவையற்ற சிந்தனைகளில் இருந்து குருபகவானின் பலம் உங்களைக் காப்பாற்றும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முயல்வீர்கள். பொருளாதாரத்தில் சில தடைகளைக் காண நேரிடும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யலாம். தகவல் தொடர்பில் இடைஞ்சல்களை சந்திப்பீர்கள். உறவினர் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமிதம் கொள்வீர்கள். மனைவியுடன் கருத்து வேறுபாடு தோன்ற வாய்ப்புண்டு. பூர்வீக சொத்துக்களில் புதிய வில்லங்கம் முளைக்கக் கூடும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. பணியாளர்கள் தற்காலிக இடமாற்றத்தை சந்திப்பர். சுயதொழில் செய்வோர் அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.
பூராடம் : ராசிநாதன் குரு, நட்சத்திர அதிபதி சுக்ரனின் சாதகமான சஞ்சாரம் சிறப்பாக செயல்பட வைக்கும். ஏழரைச் சனியின் தாக்கத்தை மறந்து வேகமாக செயல்படுவீர்கள். அயராத உழைப்பால் வெற்றி காண்பீர்கள். ஜீவனம், லாப ஸ்தானங்கள் வலிமை பெறுவதால் உற்சாகம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பேச்சில் விவேகம் வெளிப்படும். உங்களின் ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு பயனளிக்கும். சகோதரரால் நன்மை காண்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் பயன் தரும். பிரச்னைகளில் நண்பர்களின் உதவி கிடைக்கும். வாகனங்களால் நன்மை அதிகரிக்கும். அக்டோபர் மாத இறுதியில் பிரயாணம் செல்ல வாய்ப்புண்டு. உறவினர்களால் சங்கடமான சூழலை சந்திக்கலாம். பிள்ளைகளின் செயல்கள் விருப்பத்திற்கு மாறாக அமையக் கூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அவர்களின் பெயரில் சேமிக்க முயல்வீர்கள். சர்க்கரை நோயாளிகள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கைத்துணையின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். ஆடம்பர செலவு கூடும். பணியாளர்கள் தனித்திறமையின் மூலம் முக்கியத்துவம் பெறுவர். தொழிலில் லாபத்தோடு நற்பெயரும் காண்பீர்கள்.
உத்திராடம் 1ம் பாதம் : ஜென்ம நட்சத்திர அதிபதி சூரியன் நீசம் பெற்றாலும் ஜெய ஸ்தானம் ஆகிய 11ல் சஞ்சரிப்பதால் வெற்றி காண்பீர்கள். ஏழரைச் சனியைப் பற்றிக் கவலைப்படாமல் முயற்சியைத் தீவிரமாக்குங்கள். குரு பகவான் நீங்கள் நேரான பாதையில் செல்ல வழிகாட்டுவார். எடுக்கும் முடிவுகளில் குழப்பத்திற்கு இடமளிக்காமல் தெளிவாக இருங்கள். நடப்பது அத்தனையும் நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது என ஆழ்மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சில் விவேகம், நிதானம் வெளிப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதரிக்கு உதவி செய்வீர்கள். எதிர்கால சிந்தனை கூடும். வாகனத்தால் நன்மை உண்டு. உறவினர் மூலம் குடும்பப் பெரியவர்களின் பெருமையை அறிவீர்கள். மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளால் செலவு அதிகரித்தாலும் கவுரவம் காண்பீர்கள். உங்களது ஆலோசனையால் பலர் பயன் பெறுவர். கடன் பிரச்னை முடிவுக்கு வரும். சர்க்கரை நோயாளிகளுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. வாழ்க்கைத்துணையின் செயல்பாடுகள் வெற்றிக்கு துணை நிற்கும். . சுயதொழில் செய்வோர் எதிர்பார்த்த லாபம் காணும் நேரம் இது. பணியாளர்கள் அலுவலகத்தில் செல்வாக்குடன் திகழ்வர்.