செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இரவு 6.30 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவில் பிரகாரத்தில் ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. கோவில் பூசாரிகள் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர். இரவு 8 மணிக்கு மகா தீபாராதனையுடன் உற்சவம் நிறைவடைந்தது. இதில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் சரவணன், அறங்காவலர்கள் செந்தில் குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், வடிவேல், சந்தானம், மேலாளர் மணி மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி டி.எஸ்.பி., ராஜன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக 8 வது மாதமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி உற்சவம் நடந்தது. இது குறித்து மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்திருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வந்தனர். இவர்களை போலீசார் வளத்தி மற்றும் மேல்மலையனூர் எல்லைகளில் தடுத்து நிறுத்தினர். என்ற போதும் ஆயிரக்கணக்கானவர்கள் நடந்து மேல்மலையனூர் வந்தனர். அவர்களையும் கோவில் அருகே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.