பல்லடம்: பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில், புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு வேள்வி வழிபாட்டை துவக்கி வைத்து காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசியதாவது: இந்துக்களாகிய நாம் ஒவ்வொருவரும் குலதெய்வ, மற்றும் முன்னோர் வழிபாடு மேற்கொள்ள வேண்டியது அவசியம். வீட்டிலேயோ, அல்லது கோவில்களிலோ முன்னோர் வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும். ராமபிரான் மணலை திதி கொடுத்ததாக வரலாறு கூறுகின்றது.
கோவில்கள் என்பது வீட்டு பிரச்சினைகளை பேசும் இடமல்ல. இறைவன் நாமத்தை மட்டுமே அங்கு சொல்ல வேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் கடவுளை மறக்கக் கூடாது. பிறப்பு இறப்பு என்பது கடவுள் கொடுத்தது. மரணம் என்பது அனைவருக்கும் வரக்கூடியது. ஆனால், அகால மரணம் என்பது வேதனைக்குரியது. இறைவன் நாமத்தால் மட்டுமே, நல்லதொரு நிலையை அடைய முடியும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, அமாவாசையை முன்னிட்டு மஹா ம்ருத்தியுஞ்ஜய வேள்வியும், இதை தொடர்ந்து, நவகிரகங்கள் மற்றும் மூலவருக்கு தீர்த்த அபிஷேக பூஜையும் நடந்தது. இறுதியில், சிறப்பு அலங்காரத்துடன் மூலவர் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.