பதிவு செய்த நாள்
17
அக்
2020
02:10
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 5 கோடி ரூபாய் மதிப்பு நிலம், நேற்று மீட்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில், புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.இதன் வடக்கு கோபுர வீதியில், கோவிலுக்கு சொந்தமாக, சர்வே எண்.557/25ல், 92 சென்ட் இடம் உள்ளது. இதில், 18 சென்ட், வாகன மண்டபம்.இந்த மண்டபம், 1904ல், அலமேலு அம்மாள் என்பவருக்கு, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. 2003ம் ஆண்டு, குத்தகை முடிந்தது.குத்தகை காலம் முடிந்ததால், மண்டப இடத்தை ஒப்படைக்க வேண்டும் என, கோவில் நிர்வாகம் கூறியதை, அலமேலுவின் வாரிசுதாரர்கள் மறுத்தனர்.இதையடுத்து, 2008ல், வேலுார் இணை ஆணையர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், கோவில் இடத்தை ஒப்படைக்க வேண்டும் என, வாரிசுதாரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து, 2013ல், வாரிசுதாரர்களான விநாயகசுந்தரம், சம்மந்தம் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதிலும், இடம் கோவிலுக்கே சொந்தமானது என, பிப்ரவரி, 19ம் தேதி, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கோவில் நிர்வாகம், 18 சென்ட் வாகன மண்டப இடத்தை, நேற்று மீட்டு, கோவில் நிலம் என, அறிவிப்பு பலகையும் வைத்தது. இதன் மதிப்பு, 5 கோடி ரூபாய் என, அதிகாரிகள் கூறினர்.