பதிவு செய்த நாள்
18
அக்
2020
03:10
துாத்துக்குடி:குலசேகரபட்டினம், முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. துாத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில், 12 நாட்கள் நடக்கும் தசரா திருவிழாவில், பக்தர்கள் விரதமிருந்து, காளி, பெண், அனுமன், குறத்தி, குறவன், அம்மன் போன்ற பல்வேறு வேடமிட்டு ஊர் ஊராக சென்று, தர்மம் எடுத்து அம்மனுக்கு காணிக்கை செலுத்துவர்.
இவ்விழாவில், கடற்கரையில் நடக்கும் சூர சம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்தாண்டு கொரோனா பாதிப்பால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி உள்ளது. காப்பு கட்டியவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம். தங்கள் சொந்த ஊரிலேயே காப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தசரா விழா நேற்று காலை, 10:45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. விழாவின், 12 நாட்களிலும் இரவில் முத்தாரம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, கோவில் வளாகத்தை வலம் வருவார். முதல் நாளான நேற்று இரவு, சிம்ம வாகனத்தில் துர்கை கோலத்தில் எழுந்தருளினார். முக்கிய நிகழ்வான மகிஷாசூர சம்காரம், அக்., 26ல் பக்தர்களின்றி கோவில் வளாகத்தினுள் நடக்க உள்ளது.