கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்களுக்குள் செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை மறுநாள் துர்காக பூஜை துவங்க உள்ளது. இந்த விழாவிற்காக பல இடங்களில் துர்க்கை சிலைகள் நிறுவப்பட்டு பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:மேற்கு வங்கம் முழுதும் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்வர்.அப்படி வருவதால் கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை தலைமை நீதிபதி ராதாகிருஷ்ணன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் மக்களுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது.பெரிய பந்தல்கள் இருக்கும் பகுதிகளில் 10 மீட்டர் வரையும் சிறிய பந்தல்களில் 5 மீட்டர் வரையும் மக்கள் அனுமதிக்கப்படக்கூடாது. பூஜை ஒருங்கிணைப்பாளர்கள் 25 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவேண்டும். இதற்கான உத்தரவை மாநில அரசு பிறப்பிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.