பதிவு செய்த நாள்
20
அக்
2020
10:10
பூஜை நேரம் :மாலை 5:00 முதல் இரவு 7:00 வரை
முன்னொரு காலத்தில், ரித்வாக் என ஒரு முனிவர் இருந்தார். அவருக்கு, ஒரு மகன் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தான். அவன் வளர வளர, அவனது செயல்பாடுகள், தீயவையாகவே இருப்பதைக் கண்டு, முனிவர் வருந்தினார். வேதங்களைக் கற்பிக்க முயற்சித்தார்; அதில் இஷ்டப்படாமல், கூடாநட்புகளுடன் பொழுதைப் போக்கினான்.
மது, மாது என, அடாத செயல்களைச் செய்யத் துவங்கினான். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த தன் மகன் தடம்புரண்டு விட்டதால், நட்சத்திரத்தின் மீது கோபம் கொண்டு, நட்சத்திர மண்டலத்திலிருந்து, பூமியில் விழுமாறு சபித்து விட்டார். முனிவரின் சாபத்தால், பூமியில் குமுதமலையில் விழுந்தது ரேவதி நட்சத்திரம். அம்மலையிலிருந்து ஒளியும், அழகும் நிரம்பிய ஒரு பெண் தோன்றினாள். அங்கு தவம் செய்து கொண்டிருந்த ப்ரமுக முனிவர், ரேவதி நட்சத்திரத்தின் ஒளியால், அழகிய பெண் தோன்றியிருப்பதை, ஞானக்கண்ணால் அறிந்து, அவளுக்கு ரேவதி எனப் பெயரிட்டு, தம் மகளாக வளர்த்தார். அவளது அழகுக்கும், தேஜசுக்கும் தகுந்த மணமகன் கிடைக்க வேண்டுமே என்று கவலை கொண்டு, தினமும் யாகம் செய்து, தம் வளர்ப்பு மகளுக்கு ஏற்ற வரனை அருளுமாறு வேண்டினார். ஒருநாள், அக்னிதேவன், அம்முனிவருக்குக் காட்சியளித்து, உம் மகளுக்கு ஏற்ற மணமகன், விந்திய மலையை ஆண்டு வரும் விக்கிரமசீலன் என்ற மன்னனுக்கும், காளிந்தீ என்ற
அரசிக்கும் பிறந்த துர்த்தமன் என்ற இளவரசனேயாவான்; அழகிலும், வீரத்திலும் இணையற்றவன். பதினான்கு மன்வந்திரங்களில், முதலாவது மன்வந்திரமாகிய ஸ்வாயம்புவ மன்வந்திர மன்னனின், கொள்ளுப் பேரனாவான். அரசிளங்குமரன் துர்த்தமனுக்கு, உம் மகளைத் திருமணம் செய்து கொடு. காலம் வரும் போது, அவனே இங்கு வருவான்... என, அருளினார்.
சில நாட்களில், இளவரசன் துர்த்தமன் வேட்டையாடச் சென்றபோது, எதார்த்தமாக ப்ரமுக முனிவர் ஆசிரமத்தை அடைந்தான்; அப்போது, முனிவர் யாகத்தில் இருந்தார். இளவரசனை, ரேவதியே வரவேற்றாள். அவளது அழகு, பண்பாடு ஆகியவற்றைக் கண்டு வியந்த துர்த்தமன், அவளை மனைவியாக அடைய விரும்பினான். யாகத்தில் இருந்த முனிவருக்கு, இவையனைத்தையும் அக்னிதேவன் புலப்படுத்த, மகிழ்ச்சியோடு யாகத்தை முடித்த முனிவர், இளவரசனை வரவேற்று,
மணமகனுக்கு செய்ய வேண்டிய மரியாதைகளையும் செய்தார். இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட இளவரசனுக்கு, இது அக்னிதேவனின் அருள்... என்று முனிவர், விளக்கினார். ரேவதிக்கும், துர்த்தமனுக்கும் திருமணம் செய்வது எனப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது.
இச்சமயத்தில், ரேவதி தம் வளர்ப்புத் தந்தையிடம், தம் திருமணத்தை ரேவதி நட்சத்திரத்தில் வைக்குமாறு வேண்டினாள்.அதோடு, குமுத மலையில் விழுந்த ரேவதி நட்சத்திரத்தை, மீண்டும் நட்சத்திர மண்டலத்தில் இணைக்க வேண்டும் எனவும், வரம் கேட்டாள். சகலமும் அறிந்த ப்ரமுக முனிவர், தம் தவ வலிமையாலும், அக்னிதேவனின் அருளாலும், ரேவதி நட்சத்திரத்திற்கு, ரித்வாக் முனிவரால் ஏற்பட்ட சாபத்தை நீக்கி, மீண்டும் நட்சத்திர மண்டலத்தில் இணையுமாறு செய்தார். ரேவதிக்கும், இளவரசன் துர்த்தமனுக்கும் திருமணம் இனிதே நடந்தது. தம்பதியர், முனிவரை வணங்கி ஆசி பெறுகையில், ஸ்வாயம்புவ மன்வந்திரத்தின் மன்னன் பரம்பரையில் வந்த எனக்கு, ஒரு மகன் பிறந்து, அவனும் ஒரு மன்வந்திரத்தின் மன்னனாக விளங்க வேண்டும். அதற்கு வழிகூறுங்கள்... என, இளவரசன் துர்த்தமன் வேண்டினான். முனிவரும், ஈரேழு உலகிற்கும் அன்னையாகிய ஸ்ரீபராசக்தி, பவானி, துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற பெயர்களில் அருளுபவள்; நீ, பவானியை நவராத்திரி விரதம் இருந்து வழிபட்டால், நீ விரும்பும் மகனை வரமளிப்பாள்... எனக் கூறினார்.
இந்த விஷயங்களையெல்லாம் அறிந்த ரித்வாக் முனிவரும், என் மகனும் திருந்தி, வேதங்களைக் கற்று, முனிவர் வம்சத்தைக் காக்க வேண்டும்... எனக் கேட்க, ப்ரமுக முனிவரும், நவராத்திரி விரதம் இருந்து அன்னையை வழிபட்டால், உம் மகனும் தீய செயல்களிலிருந்து விடுபட்டு ஞானியாவான்... எனக்கூற, எல்லாருமாக நவராத்திரி பூஜையைச் செய்தனர். அன்னை ஸ்ரீ பவானி, அவர்கள் முன் தோன்றி, ரேவதிக்கும், துர்த்தமனுக்கும் ஒரு மகன் பிறப்பான். அவன் பிற்காலத்தில் ஐந்தாவது மன்வந்தரமாகிய ரைவத மன்வந்திரம் என்ற பெயருடன், இவ்வுலகை ஆள்வான்... என வரமருளினாள். ரித்வாக் முனிவரைப் பார்த்து, இனி, உன் மகன் எந்தத் தவறுகளும் செய்ய மாட்டான் உம்மிடம் வேதங்களைக் கற்று, மிகப் பெரிய ஞானியாவான்... என, வரமருளி மறைந்தாள். எல்லாரும், ஸ்ரீபவானியை ஆராதித்து மகிழ்ந்தனர். இவ்வரலாற்றைப் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், இனிய திருமண வாழ்க்கை அமையும்;
நல்ல புத்திரர்கள் பிறப்பர்.
பூஜிக்கும் முறை
தாம்பாளத்தில் ஐஸ்வர்யக் கோலம் வரைந்து, நடுவிலும், சுற்றிலுமாக ஒன்பது தீபங்கள் ஏற்றி வைத்து, ஓம் ஸ்ரீ பவான்யை நமஹ... என, அர்ச்சனை செய்யவும்.
நிவேதனம் : பால் கொழுக்கட்டை, கடலைப் பருப்பு சுண்டல் நிவேதனம் செய்யவும்.
பெண்களுக்கு : சுமங்கலிகளுக்கு பச்சை ரவிக்கைத்துண்டு மற்றும் மங்களப் பொருட்கள் வழங்கி, ஆரத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்யவும்.
சுலோகம்: பவானித்வம் தாஸே மயிவிதர த்ருஷ்டிம் ஸகருணா,
இதிஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானித்வம் இதிய
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்,
முகுந்த ப்ரம்ஹேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம்||
சவுந்தர்யலஹரீ
பொருள் : பவன் எனப்படும் சிவனின் சக்தியாதலால், பவானீ எனும் திருநாமம் பெற்றவளே! பவானீ என அழைத்தால் மகிழ்பவளே! அவர்களை உன் கடைக்கண் பார்வையால் புனிதப்படுத்துபவளே! விஷ்ணு, பிரம்மன், இந்திரன் முதலியவர்களால் ஆரத்தியெடுத்து வணங்கப்படும் உன் திருவடிகளை வணங்கி நிற்கும் என்னையும் காப்பாற்று.
நவராத்திரி ஐந்தாம் நாளுக்கான நிவேதனம்
பால் கொழுக்கட்டை: நவராத்திரிக்கு நிவேதன உணவு செய்யச் சொல்லிக் கொடுக்க, ஜி.ஆர்.டி., ஓட்டல் தலைமை சமையல் கலைஞர் சீதாராம் பிரசாத் முன் வந்தார். ஒவ்வொரு பெயராகச் சொல்லச் சொல்ல, நிமிட நேரங்களில் எல்லாவற்றையும் தயார் செய்து அசத்தினார். இனி தினமும், சீதாராம் பிரசாத் சொல்லிக் கொடுப்பார்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 150 கிராம்
தேங்காய் பால் - 350 மில்லி
சர்க்கரை - 200 கிராம்
பால் மற்றும் தண்ணீர் - 375 மில்லி
ஏலக்காய் பொடி - 2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை: வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்துக் கொள்ளவும். வென்னீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, நெய் ஊற்றி, சிறிது சிறிதாக அரிசி மாவு சேர்த்து மிருதுவாக பிசைந்து, சிறிது நேரம் மூடி வைக்கவும். பின், சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருட்டிய அரிசி மாவு உருண்டைகளை பால் மற்றும் மெல்லிய இரண்டாம் தேங்காய் பாலில் வேக வைக்கவும். மாவு வெந்து, பாலின் மேல் கொழுக்கட்டைகள் மிதக்க ஆரம்பித்தவுடன், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும். சர்க்கரை கரைந்தஉடன், முதல் தேங்காய் பால் சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.இதில் அடங்கி உள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 2344.3; கார்போஹைட்ரேட், 350.1; புரதம், 26; கொழுப்பு, 89.7.
கடலைப்பருப்பு சுண்டல்!
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 500 கிராம்
எண்ணெய் - 15 மில்லி
காய்ந்த மிளகாய் - 1
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
துருவிய இஞ்சி - 10 கிராம்
பச்சை மிளகாய் - 1
பெருங்காயம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கடலை பருப்பை வேக வைத்துக் கொள்ள வும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் தாளிக்கவும்.வேக வைத்த கடலைப்பருப்பை போட்டு, உப்பு சேர்க்கவும். பின், அடுப்பை அணைத்து விட்டு, துருவிய தேங்காய் சேர்க்கவும்.இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 2096.42; கார்போஹைட்ரேட், 252; புரதம், 114.53; கொழுப்பு, 65.31.இரண்டு ரெசிப்பிகளும், தலா ஐந்து பேர் சாப்பிடலாம். --ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் மயிலாடுதுறை.