புதுச்சேரி: அங்காளம்மன் கோவிலில் இன்று மாலை ஆயுத பூஜை விழா கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி, சின்ன சுப்ராயப் பிள்ளை வீதியில் பிரசித்திப் பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 26 நாட்கள் நடக்கும் நவராத்திரி பெருவிழா கடந்த 17ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் வேத சரஸ்வதி அலங்காரத்திலும், நேற்று யோக சரஸ்வதி அலங்காரத்திலும் அம்மன் அருள்பாலித்தார். நவராத்திரி விழாவில் ஆயுத பூஜை விழா இன்று நடக்கிறது. வரும் 11ம் தேதியன்று, பாவாடைராயர் சுவாமிக்கு பள்ளயம் உற்சவத்துடன் பெருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயக்குமார், தனி அதிகாரி ஜனார்த்தனன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.