கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2020 05:10
தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கொடிமரம் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில், 1937-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரம் பழுது அடைந்ததால், புதிய கொடிமரம் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து பெங்களூரைச் சேர்ந்தவரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான ரவிநாராயணன் என்பவர் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கொடிமரம் அமைத்து தர முன் வந்தார். அதன்படி கடந்தாண்டு மலேசியாவிலிருந்து 4 டன் எடையுள்ள தேக்கு மரம் இறக்குமதி செய்யப்பட்டு, கும்பகோணம் கொண்டு வரப்பட்டது. பின்னர் சாரங்கபாணி கோவிலில் புதிய கொடிமரத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. பின்னர் ஸ்திபதியார்கள் கொடிமரத்தை செதுக்கி வடிமைத்து அதன் எடை இரண்டரை டன்னாக கொண்டு வந்தனர். இதையடுத்து புதிய கொடிமரத்துக்கு இன்று பால்,மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை மண்டல துணை கமிஷனர் (நகைகள் சரிபார்ப்பு) நித்யா, கோவில் செயல் அலுவலர் ஆசைதம்பி மற்றும் உபயதாரர்கள் ரவிநாராயணன், சுசீலா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். தொடர்ந்த கிரேன் மூலம் புதிய கொடிமரம் துாக்கி நிறுத்தப்பட்டது.