பதிவு செய்த நாள்
31
அக்
2020
05:10
தஞ்சாவூர், ஐப்பசி பவுளர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1000 கிலோ அரிசி, 500 கிலோ காய்கறி,இனிப்பு வகையால் அலங்காரம் செய்யப்பட்டு இன்று அன்னாபிஷேகம் நடந்தது.
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில், லிங்கம் 12 அடி உயரமும், ஆவுடையார் 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத் திருமேனியாகத் மூலவரான பெருவுடையார் திகழ்பவர். பெருவுடையாருக்கு ஐப்பசி பவுளர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு பக்தர்களால் 1000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்கள், இனிப்பு வகைகள், 250 கிலோ மலர்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேணி முழுவதும் சாத்தப்பட்டும், காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டும், அன்னாபிஷேகம் நடந்தது. பின்னர், மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து இரவு லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள அன்னம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகப் போடப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.