பதிவு செய்த நாள்
31
அக்
2020
05:10
பெரம்பலுார், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 300 கிலோ அரிசியால் சாதம் தயார் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது. அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ளது பிரகதீஸ்வரர் கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜசோழன் மகன் ராஜேந்திரசோழனால் கங்கைநதி வரை போராடி வெற்றி பெற்ற சின்னமாக கட்டப்பட்டது. இக்கோவில் உலக பிரசித்திபெற்றது. புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
கோவிலில் சிங்கமுககிணறு, ஒரேகல்லிலில் ஆன நவக்கிரகம் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் உலக அளவில் வியக்க கூடியதில் ஒன்றாக கோவிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டதாகும், ஒவ்வொரு வருடமும் ஐப்பசி பவுர்ணமி, அரிசியால் சாதம் சமைத்து கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு காலை மகாபிஷேகம், மாலையில் அன்னாபிசேக அலங்கார தீபாராதனையும் நடைபெறும் வழக்கம். இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேகம் ஐப்பசி பெளர்ணமி நாளான நேற்று நடந்தது. காலை 9 மணியளவில் கணக்கவிநாயகருக்கு அபிசேகம், பிரகதீஸ்வரர் மற்றும் பிரகன்நாயகிக்கு மகாபிசேகம் தீபாரதனை நடந்தது. இதைத்தொடர்ந்து, கோவிலில் உள்ள மடப்பள்ளியில் 300 கிலோ பச்சரியால் சாதம் தயார் செய்யப்பட்டது. பின்னர், உலர்த்தப்பட்டு பேஸ்ட் போல ஆக்கப்பட்டு லிங்கத்தின் மீது அன்னம் சாத்தப்பட்டது. மாலை 6:15 மணியளவில் அன்னாபிசேக அலங்கார தீபாரதனை நடந்தது.
இது குறித்து, அன்னாபிஷேக கமிட்டி உள்ளூர் ஒருங்கிணைப்பாளர் கோமகன் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்றால் இந்த ஆண்டு அன்னாபிசேகம் அன்னகாப்பு ஆக நடந்தது. அன்னாபிஷேகத்துக்காக, 300 கிலோ பச்சரிசியால் சாதம் தயார் செய்யப்பட்டு லிங்கத்துக்கு மேல் சாத்தப்பட்டது. லிங்கத்தின்மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது. இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதில், சிவாச்சாரியர்கள் மற்றும் காஞ்சி காமகோடி அன்னாபிசேக கமிட்டி சாதம் சமைத்து அன்னாபிஷேகம் செய்தனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
*பக்தர்களுக்கு அனுமதி இல்லை: கொரோனா நோய் தொற்று காரணமாக, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு அரசு மற்றும் மாவட்டம் நிர்வாக தடை விதித்திருந்தது. இதனால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அன்னாபிசேகத்தை காண வந்த பக்தர்கள் தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.