Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்ம புராணம் பகுதி-1
முதல் பக்கம் » பத்ம புராணம்
பத்ம புராணம் பகுதி-2
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 மே
2012
01:05

11. விகுந்தலனின் சரிதம்

சத்திய யுகத்தில் ஹேமகுந்தலன் என்னும் ஒரு வைசியன் இருந்தான். அவன் தர்மவான். பிராமண பக்தன். அவன் கோடிக்கணக்கானப் பொருள் ஈட்டினான். தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தை அடைந்ததை அறிந்து தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை, ஆலயம் கட்டுதல், குளம் வெட்டுதல், மரம் நடுதல் போன்றவற்றிற்குச் செலவு செய்து, மேலும் பெருந்தொகையை தானங்களுக்காகச் செலவிட்டுப் புண்ணியம் சேர்க்கலானான். இவ்வாறு செலவழித்த பின் அவன் மீதிச் சொத்தை தன் இரு மகன்களாகிய ஸ்ரீ குந்தலனுக்கும், விகுந்தலனுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு, தவம் செய்ய கானகம் சென்றுவிட்டான். இளைஞர்களாக இருந்த வைசியனின் புத்திரர்கள் மனம் போனபடி வாழ்ந்து, தீய நண்பர்களுடன் கூடி பணத்தின் அருமை தெரியாமல் செலவழித்து, கடைசியில் வறியவர் ஆயினர். நண்பர்களும் விலகிவிட்டனர். வறுமையின் காரணமாக உணவுக்காக காட்டுக்கு வேட்டையாடச் சென்றனர். வேட்டையாடி வந்த அவர்களில் ஸ்ரீ குந்தலனை ஒரு புலி கொன்றது. விகுந்தலனைப் பாம்பு கடிக்க அவனும் இறந்தான். அவர்களை யமகிங்கரர்கள் யமன் முன் கொண்டு நிறுத்த, யமன் ஸ்ரீகுந்தலனை கொடிய நரகத்துக்கும், விகுந்தலனை சொர்க்கத்துக்கும் அனுப்புமாறு கூறினான். அது கண்ட விகுந்தலன் யம கிங்கரர்களிடம் நாங்கள் இருவரும் ஒரே குலம். ஒரே பெற்றோர் வயிற்றில் பிறந்த சகோதரர்கள். இருவருமே தவறான காரியங்களைச் செய்தோம்.

இருவருமே எதிர்பாராத விதமாக விபத்தால் இறந்தோம். ஏன் அவருக்கு நரகம், எனக்கு சொர்க்கம்? என்று வியப்புடன் கேட்டான். அப்போது யமதூதர்கள் உண்மை தான். ஆனால் ஒன்றை நீ மறந்து விட்டாய். உனக்கு ஒரு பிராமண நண்பன் இருந்தான். அந்த ஸ்வாமித்திரனுடன் ஒருநாள் யமுனைக் கரையிலுள்ள பாபபிராண ஷணா என்னும் தீர்த்தத்தில் இருவரும் நீராடினீர்கள். அதனால் உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிட்டன. உன் சகோதரன் புனித நீராடவில்லை. அதனால் அவனுக்கு நரகம் என்றனர். இதை ஒத்துக்கொள்ள முடியாது. என் சகோதரனைக் காத்திட ஏதேனும் வழியிருக்கிறதா? எனக் கேட்க, யமதூதர்கள் எட்டுப் பிறவிகளுக்கு முற்பட்ட பிறவியில் விகுந்தலன் புண்ணியம் சேர்த்து வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அதனை நீ உன் சகோதரனுக்கு மாற்றினால் அவன் நரகத்திலிருந்து விடுபடுவான் என்றனர். எனக்கு ஞாபகம் இல்லை. அது என்ன புண்ணியம்? என்று விகுந்தலன் கேட்டான். அதற்கு யமதூதன் சொன்னான். எண் பிறவிகளுக்கு முன் நீ வாழ்ந்த நகருக்கு சகுனி என்ற அந்தணரின் ஒன்பது புத்திரர்களில் நிர்மோகன், தியானகஸ்தன், ஜிதகாமன், குணாதிகன் என்ற நால்வர் முனிவர்களாகி யாசகத்திற்கு வந்தனர். அவர்களுக்கு அந்தணனாக இருந்த நீ உண்ண உணவு, இருக்க இடம் தந்து உபசரித்தாய். அதுவே நீ செய்த புண்ணியம். அதனை உன் சகோதரனுக்கு மாற்றிவிட்டால் அவனும் சொர்க்கம் அடைவான். விகுந்தலன் மனமுவந்து அவ்வாறே செய்திட, ஸ்ரீகுந்தலன் நரகத்திலிருந்து விடுதலை பெற்றான். அதனால் சகோதரர்கள் இருவரும் ஒன்றாக சொர்க்கம் சென்றனர். இதுதான் விகுந்தலனின் அபூர்வ சரிதம்.

12. ஆலயம் தூய்மை செய்தல்

துவாபர யுகத்தில் தண்டகன் என்றொரு திருடன் இருந்தான். அவன் மிகவும் கொடியவன். அந்தணர்தம் சொத்தை அபகரித்தான். நண்பர்களுக்குத் துரோகம் செய்தான். புலால் உண்டான். மதுஅருந்தி வந்தான். ஒரு சமயம் அவன் ஒரு விஷ்ணு  ஆலயத்திற்குள் திருடச் சென்றான். அவன் காலில் மண்ணும், தூசியும் இருந்ததால் அவற்றை வாயிற்படியில் துடைத்தான். இதன் மூலம் அந்த வாயிற்படி இவன் கால் தோய்த்த இடத்தில் தூய்மையானது. விக்கிரகத்தில் ஒன்றும் பயனில்லை என்று பெருமானின் நகைகள், வெள்ளி, பொன் பாத்திரங்களை ஒரு மூட்டையாகக் கட்டி வெளியேறுகையில் சில பொருள்கள் கீழே விழ, அந்த சப்தம் கேட்டு காவல்காரர்கள் அவனைப் பிடிக்க ஓடி வந்தனர். அவன் தப்பி ஓடினான். வழியில் ஒரு பாம்பின் மீது கால் வைக்க அது அவனைக் கடிக்க அவன் மரித்தான். அவனை யமதூதர்கள் யமன்முன் கொண்டு வந்து நிறுத்திட சித்திரகுப்தன் அவனுடைய பாவ புண்ணியங்களை எடுத்துரைத்தான். இவன் ஒரு திருடன். உலகில் என்னென்ன அக்கிரமங்கள் உண்டோ, அத்தனையும் செய்தவன். எனினும், ஒரே ஒரு புண்ணியம் செய்துள்ளான். அவன் விஷ்ணு ஆலயப் படியைத் தூய்மை செய்தான். அது மற்ற பாவங்களை நீக்கிவிட்டது. அது கேட்ட யமன் தன் இருக்கையை விட்டு இறங்கி வந்து தண்டகனை வணங்கினான். அவனை நரகில் தள்ளக்கூடாது. அவன் செல்ல வேண்டியது விஷ்ணுலோகம் என்று அங்கு அனுப்பி வைத்தான். விஷ்ணு ஆலயம் தூய்மை செய்தல் சாலச் சிறந்தது.

ஓர் எலி செய்த புண்ணியச் செயல்

திரேதா யுகத்தில் வைகுந்தன் என்றொரு பிராமணன் இருந்தான். அவன் ஒரு விஷ்ணு பக்தன். ஒருநாள் அவன் விஷ்ணு ஆலயத்தில் விளக்கு ஏற்றி விட்டு வீட்டுக்குச் சென்றான். நெய் ஊற்றி விளக்கை ஏற்றியதால், அதன் மணம் ஓர் எலியை ஈர்த்தது. அது விளக்குத்திரியைக் கடிக்க ஆரம்பித்தது. அந்த அசைவினால் விளக்கு நன்கு பிரகாசிக்கத் தொடங்கியது. அதனால் பெருமான் விக்கிரகமும் ஒளிர்ந்தது. அந்த எலி ஒரு பாம்பினால் இறந்தது. அதனை யமதூதர்கள் கயிறு கட்டி இழுத்துச் செல்ல முற்பட்ட போது விஷ்ணு தூதர்கள் அங்கு வந்து அவர்களைத் தடுத்து, விஷ்ணு பக்தர்களை யமதூதர்கள் நெருங்கக்கூடாது என்று தெரியாதா. இது விஷ்ணுவின் விக்கிரகத்தைச் சாந்தி அடையச் செய்தது. எனவே அது விஷ்ணு பக்தனாயிற்று. அதன் பாவங்கள் விலகிவிட்டன. அது எங்களுடன் விஷ்ணுலோகம் அடையும் என்று கூறி அந்த எலியை விஷ்ணு லோகம் எடுத்துச் சென்றனர். அங்குப் பல காலம் இருந்து அது ஒரு இளவரசியாக உலகில் பிறந்தது. விஷ்ணு பிரதிமை ஒளிரச் செய்த அது பெற்ற பேறு சிறந்ததாயிற்று.

13. ஸ்ரீதரன் செய்த தான பலன்

திரேதா யுகத்தில் ஸ்ரீதரன் என்றொரு மன்னன் ஹேமாபிரபாவதி என்னும் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவர்கள் வாழ்க்கை நன்றாக இருப்பினும் அவர்கள் புத்திரபாக்கியம் இல்லாதிருந்தனர். ஒருநாள் ஸ்ரீதரன், வேதவியாசர் என்ற முனிவரைத் தரிசித்தான். அவரிடம் தன் குறையை கூறி தனக்கு ஏன் புத்திரப் பேறு இல்லை என்று கேட்டான். அப்போது முனிவர் அவனது முற்பிறவி வரலாற்றை எடுத்துரைத்தார். ஸ்ரீதரன் முற்பிறவியில் சந்திரன் என்ற பெயரில் இருந்த ஓர் அந்தணன். ராணி ஹேமாபிரபாவதி சந்திரன் மனைவி சங்கரி, இருவரும் ஒரு நாள் பயணம் செய்து கொண்டிருந்தபோது வழியில் ஒரு சிறுவன் ஒரு குட்டை நீரில் முழுகிப் போவதைக் கண்டும், அவசர நிமித்தமாக அவனைக் காப்பாற்றாமல் சென்று விட்டனர். அந்தப் பாவத்தினால் இப்பிறவியில் மகப்பேறில்லை என்றார் முனிவர். இதற்கு வழியொன்றும் இல்லையா என்று மன்னன் கேட்க, வேதவியாசர் பிராமணர்களுக்குப் பூசணிக்காய், ஆடை தானம் கொடு. பசுவும், பொன்னும் தானம் அளி. புராணங்களைக் கேள். அதன்மூலம் புத்திரப்பேறு ஏற்படும் என்றார். ஸ்ரீதரனும் ஹேமாபிரபாவதியும் அவ்வாறே பிராமணர்களுக்குத் தானங்கள் செய்தனர். அதனால் அவர்களுக்கு ஓர் அழகிய புத்திரன் பிறந்தான். தானம் பலனளிக்காமல் போகாது.

14. லீலாவதியும் ராதாஷ்டமி விரதமும்

முன்னொரு காலத்தில் லீலாவதி என்றொரு தீயவள் இருந்தாள். அவளுக்கு நற்காரியங்களில் நாட்டம் ஏதுமில்லை. ஒருநாள் அவள் ஓர் ஆலயத்தின் அருகில் செல்லுகையில் அங்கு எல்லோரும் ராதாஷ்டமி விரதத்தை அனுஷ்டித்துக் கொண்டிருந்தனர். ராதையின் உருவத்துக்கு பூ, பழம், சாம்பிராணி, வஸ்திரம் எல்லாம் படைத்திருந்தனர். சிலர் ஆடிக்கொண்டும், சிலர் பாடிக் கொண்டும், சிலர் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டும் இருந்தனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்ட லீலாவதிக்கு அவர்கள், இன்று பாத்ர மாத, சுக்ல பட்ச அஷ்டமி திதி. ராதையின் பிறந்த நாள். எங்கள் பாவங்கள் தொலைய நாங்கள் ராதாஷ்டமி விரதம் அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம் என்றனர். நானும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறேன் என்று கூறிய அவள் பாம்பு கடித்து இறந்து விட்டாள். அப்போது யமதூதர்கள் அவளை இழுத்துச் செல்ல முற்பட, விஷ்ணு தூதர்கள் லீலாவதி ராதாஷ்டமி விரதம் அனுஷ்டித்ததால் அவள் பாவங்கள் நீங்கின என்றனர். அவள் நேரே விஷ்ணுலோகம் அடைந்தாள். ராதாஷ்டமி விரதம் அத்தகைய பெருமை பெற்றது. கோலோகத்தில் (அ) விஷ்ணு லோகத்தில் கிருஷ்ணனின் உடலில் இடதுபுறத்தில் இருந்து தோன்றிய ராதை அங்கு அவர் வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறாள். ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த போது ராதையும் பிறந்தாள். விருஷபானு என்பவர் அவளது தந்தை, கலாவதி அவளுடைய தாயார், அவளை அயன கோஷர் என்பவர் மணந்தார். இந்தியாவில் நாட்டுப்புறப்பாடலாக ராதாகிருஷ்ணர்களின் அன்பு வெளிப்படுத்தப்படுகிறது.

15. மகாலட்சுமி விரத மகிமை

துவாபர யுகத்தில் சௌராஷ்டிராவில் பாத்ரச்ரவன் என்றொரு அரசனும், அவன் மனைவி சுரதிசந்திரிகாவும் வாழ்ந்து வந்தனர். அரசன் வேத சாஸ்திரப் பண்டிதன். அத்தம்பதியருக்கு சியாமபாலா என்றொரு மகள் இருந்தாள். சியாமபாலா வெளியே சென்றிருந்த போது மகாலட்சுமி அந்த அரண்மனைக்கு ஒரு கிழவி வடிவில் வந்து வாயிற் காவலனிடம் தான் சுரதி சந்திரிகாவைக் காண வேண்டும் என்று கூற, அவன் ஏன்? எதற்கு? என்று கேட்க, மகாலட்சுமி (கிழவி) தன் பெயர் கமலா என்றும், தனது கணவர் புவனேசன் என்றும், தான் துவாரவதியில் வசிப்பதாகவும் ராணியிடம் அவளுடைய முற்பிறவி வரலாற்றை நினைவு கூற வேண்டுவதாகவும் கூறினாள். (கமலம் என்பது தாமரை. அதில் இருப்பவள் கமலா (அ) லட்சுமி. புவனேசன் என்றால் உலகத் தலைவன் (அ) கடவுள். துவாரவதி என்பது துவாரகை.)

காவலாளியிடம் லட்சுமியாகிய கிழவி கூறிய கதை:

சுரதி சந்திரிகா முற்பிறவியில் வைசிய குடும்பத்தில் பிறந்தாள். அவள் கணவனிடம் சண்டை போட்டுவிட்டு விலகிச் சென்றாள். அவளை லட்சுமிதேவி சந்தித்து மகாலட்சுமி விரதம் அனுஷ்டிக்குமாறு அறிவுரை வழங்க, அவளும் அவ்வாறே செய்து வந்ததன் பயனாக விஷ்ணுலோகம் அடைந்து, அங்கு நெடுங்காலம் இருந்தாள். அவளே இப்போது சுரதி சந்திரிகாவாகப் பிறந்திருப்பவள். இதைப் பற்றி ராணியிடம் நினைவூட்டவே வந்தேன். அவள் தற்போது செழிப்பாக மமதை கொண்டு விளங்குகிறாள். அவள் மகாலட்சுமி விரதம் செய்யாதிருப்பது துரதிருஷ்டம் ஆகும் என்று கூறினாள். அது என்ன விரதம்? அதை எப்பொழுது செய்ய வேண்டும்? என்று காவலாளி கேட்டான். அவ்விரதம் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும். அரிசிப் பொங்கல் அமுதை, கற்பூரத்துடன் விஷ்ணுவுக்கும், லட்சுமிக்கும் நைவேத்தியம் செய்ய வேண்டும். நான்கு நாட்கள் தொடர்ச்சியாக லட்சுமியை பூசிக்க வேண்டும். கோதுமை, தயிர், பழம், பூக்கள் தேவிக்குப் படைக்கவேண்டும் என்றாள். அது கேட்ட காவலாளி ராணியிடம் கூறிவருவதாகச் சொன்னான். ராணி அக்கிழவியை லட்சுமி என்று அறியாமலும், பிராண ஸ்திரீ கொடுத்த அறிவுரையை ஏற்காமலும் அக்கிழவியை அடித்து விரட்டினாள். அப்பிராமண ஸ்திரீ அவ்விடத்தை விட்டு கிளம்பிய போது இளவரசி சியாமபாலாவைக் கண்டாள். அக்கிழவி அழுவதைக் கண்டு, அக்கிழவியை விசாரித்து நடந்ததை அறிந்து கொண்டாள். தான் அவ்விரதத்தைச் செய்வதாகக் கூறினாள். சில ஆண்டுகள் கழித்து சியாமபாலாவை, மன்னன் சித்தேஸ்வரனின் மகன் மாலாதரனுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
சியாமபாலா கணவன் வீட்டுக்குச் சென்றவுடன் பாத்ரச்ரவன், சுரதிசந்திரிகா வீட்டை விட்டு மகாலட்சுமியும் சென்று விட அவர்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டனர். சோற்றுக்கின்றி திண்டாடினர். பாத்ரச்ரவன் தன் மகளைக் காண அவள் இல்லம் செல்ல, தந்தையின் நிலை அறிந்து அவள் திகிலடைந்தாள். தந்தைக்கு உணவளித்து நிறைய பணம் கொடுத்து அனுப்பினாள். ஆனால், அவள் தந்தை வீட்டிற்குள் நுழைந்த உடனே அவன் பெற்ற செல்வங்களெல்லாம் கரியாகி விட்டன. அடுத்து சுரதி சந்திரிகா மகளைப் பார்க்கச் சென்றாள். அந்த சமயம் லட்சுமி விரதம் அனுஷ்டிக்க வேண்டிய நேரம். தாயும், மகளும் சேர்ந்து மகாலட்சுமி விரதம் செய்து முடித்தனர். அதன் பலனாய் சுரதி சந்திரிகா தன் வீட்டிற்கு வர அவளுடைய வீட்டுச் செல்வம் எல்லாம் வந்து சேர்ந்தன. மகாலட்சுமி விரதத்தின் மகிமையே மகிமை!

16. தினநாதனும் விசுவாமித்திரரும்

துவாபர யுகத்தில் தினநாதன் என்ற வலிமைமிக்க ஓர் அரசன் இருந்தான். அவனுக்குப் புத்திபேறு இல்லாததால் காலவ முனிவரை வணங்கி தான் மகப்பேறு பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். முனிவர் ஒரு யாகம் செய்து அதில் எல்லா வகையிலும் சிறந்த ஒருவரை நரபலி கொடுத்தால் குழந்தை கட்டாயம் பிறக்கும் என்றார். தசபுரம் என்ற கிராமத்தில் கிருஷ்ணதேவன் என்ற பிராமணன் தன் மனைவி சுசீலையுடனும், மூன்று பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்தான். தினநாதன் யாகபலிக்கு ஆள் தேடி வந்தவன், கிருஷ்ண தேவனையும், சுசீலையும் சந்தித்து அவர்கள் மகன்களில் ஒருவனை யாக பலிக்கு அளிக்குமாறு பிரார்த்தித்தான். அவர்கள் மூத்தவனையும், இளையவனையும் கொடுக்க மறுத்ததால் நடுமகனைச் சேவகர்கள் அழைத்துச் சென்றனர். அரசன் பிராமணனுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்தான். அந்த மகனைப் பிரிந்த துக்கத்தில் அத்தம்பதியர் அழுதழுது கண் குருடாயினர். ராஜதூதர்கள் வழியில் விசுவாமித்திரரின் ஆசிரமத்தைக் கடந்து செல்கையில், அவர்களை விசுவாமித்திரர் மறித்து, யார் இந்த பிராமணச் சிறுவன்? அவனை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்? என்று கேட்க, அவர்கள் நடந்தவற்றை எல்லாம் கூறினர். அது கேட்ட விசுவாமித்திரர் சிறுவனை விட்டு விட்டு தன்னை யாகபசுவாக அழைத்துச் செல்லுமாறு கூற, அவர்கள் அதை ஏற்கவில்லை. எனவே அவரும் அவர்களுடன் சென்றார். விசுவாமித்திரர் அந்த யாகத்தைத் தானே நடத்தித் தருவதாகவும், நரபலி (அ) யாகபசு தேவையில்லை என்றும், கட்டாயம் மன்னனுக்குப் புத்திர பாக்கியம் ஏற்படும் என்றும் கூறி, நரபலி இன்றியே யாகம் நடத்தித் தந்தார். மன்னன் பிராமண புத்திரனை அவனது பெற்றோர்களிடம் ஒப்படைக்க, பையன் திரும்பி வந்த மகிழ்ச்சியில் அவர்கள் இழந்த கண்களைத் திரும்பவும் பெற்றனர். உண்மையிலேயே விசுவாமித்திரர் ஓர் உயர்ந்த ரிஷியாவார்.

17. சித்திரஸேனன்

கிருஷ்ணாஷ்டமி விரதம் ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீகிருஷ்ண ஜனன நாளாகிய பாத்ர பதமாதம், கிருஷ்ண பட்சம், அஷ்டமி திதியன்று அனுஷ்டிக்கப்படுகிறது. சித்திரசேனன் என்ற மன்னன் தரும நெறிகளிலிருந்து விலகி, தீயவர்களுடன் சேர்ந்து தீயசெயல்களைச் செய்து வந்தான். ஒருநாள் வேட்டைக்குச் சென்ற அவன் ஒரு புலியைத் தொடர்ந்து சென்றவன் யமுனை ஆற்றங்கரையை அடைந்தான். அன்று ஜன்மாஷ்டமி தினமாகையால் அப்சரசுகள் ஒன்றுகூடி அங்கு கிருஷ்ணாஷ்டமி விரதத்தை அஷ்டித்து ஸ்ரீகிருஷ்ணன் பிறந்தநாளைக் கொண்டாடினர். அதைக் கண்ட சித்திரசேனன் தானும் அவ்விரதத்தைக் கைக்கொள்ள விரும்பினான். அவ்வாறே கிருஷ்ணாஷ்டமி விரதத்தை அனுஷ்டித்து அவன் புண்ணியம் சம்பாதித்தான். அதனால் அவன் மரித்த பிறகு அவன் பாவங்கள் நீங்கிட நேராக விஷ்ணுலோகத்தை அடைந்தான். கிருஷ்ணாஷ்டமியை ஜன்மாஷ்டமி என்றும் கிருஷ்ண ஜயந்தி என்றும் கூறுவர்.

18. பீமனும் விஷ்ணு லோகமும்

அனேக ஆண்டுகளுக்கு முன்பு துவாபர யுகத்தில் பீமன் என்ற பெயருடைய நான்காம் வருணத்தினன் இருந்தான். அவன் செய்த பாபங்கள் எண்ணற்றவை. ஒருநாள் அவன் ஒரு பிராமணர் வீட்டில் கொள்ளையடிக்க எண்ணிச் சென்று யாசகம் கேட்டான். அந்த வீட்டில் அந்த அந்தணரைத் தவிர வேறு யாரும் இல்லாததால் அவர் அவனிடம் அவன் உணவை அவனே சமைத்துக் கொள்ளுமாறு கூறினார். அப்போது பீமன் தனக்கும் யாரும் இல்லை என்று கூறி, அவ்வீட்டிலேயே தங்கியிருந்து அந்தப் பிராமணனுக்குத் தொண்டு செய்வதாகக் கூறி அங்கேயே தங்கினான். இவ்வாறு அந்த வீட்டில் இடம் பிடித்த பீமன் அந்தணருக்குச் சிறு சிறு சேவைகள் புரியலானான். தினமும் உணவு தயாரித்து அளித்தான். அவர் பாதங்களைக் கழுவினான். இதன்மூலம் புண்ணியம் சம்பாதித்தான். ஒருநாள் இரவு வேறொரு திருடன் அந்த அந்தணர் வீட்டிற்கு வந்து கொள்ளை அடித்தான். அதனைத் தடுக்க பீமன் அவனுடன் சண்டையிட அந்தக் கொள்ளையன் வாள்வீசி பீமன் தலையைத் துண்டித்தான். பீமன் இறந்தவுடன் விஷ்ணு தூதர்கள் தோன்றி அவனை விஷ்ணு லோகத்துக்கு அழைத்துச் சென்றனர். நல்லவரோடு இணங்கி இருப்பது நன்றே.

19. ஹேமாபிரபா விஷ்ணுலோகம் அடைதல்

காஞ்சன் நகரில் வல்லபன் என்பவன் தன் மனைவி ஹேமபிரபாவுடன் வாழ்ந்து வந்தான். அவன் செல்வமுடன் செழிப்பாக வாழ்ந்து வந்த போதிலும் கணவர்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட ஒரு சமயம் அவன் மனைவியை அடித்து விட்டான். அதனால் அவள் மிகவும் மனம் வருந்தி அன்று முழுவதும் உணவும், நீரும் உட்கொள்ளாமல் உபவாசம் இருந்தாள். அன்று ஏகாதசி தெரிந்தோ தெரியாமலோ அவள் ஏகாதசி விரதம் இருந்து விட்டாள். அதன் மூலம் அந்த விரதபலன் அவளுக்குப் புண்ணியம் சேர்த்தது. அவள் இறந்தபோது அவளை எமதூதர் அணுக, விஷ்ணு தூதர்கள் அவர்களைத் தடுத்து அவளை விஷ்ணுலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். இது ஏகாதசி விரத மகிமை அல்லவா!

இம்மாதிரி பல நிகழ்ச்சிகள் பற்றி விவரிக்கிறது பத்ம புராணம்

1. திரேதா யுகத்தில் சுதர்சனன் என்ற பிராமணன் வருணாசிரம தருமம் தவறி வாழ்ந்ததால் அடுத்த பிறவியில் பன்றியாகவும், அதை அடுத்து காகமாகவும் தோன்றினான். காகமாக இருந்த போது விஷ்ணு, திருமஞ்சனம் செய்த நீரை அது உட்கொண்டது. அந்தப் புண்ணிய பலனாக சுதர்சனன் மோட்சம் அடைந்தான்.

2. திரேதா யுகத்தில் சௌராஷ்டிராவில் சங்கரன் என்பவன் தன் மனைவி காளிப்பிரியாவுடன் வாழ்ந்து வந்தான். அவள் கணவனை விரும்பாமல் அவன் எப்போது மடிவான் என்று காத்துக் கிடந்தாள். ஒருநாள் அவளே தன் கணவரைக் கொன்றுவிட்டு வேறொரு நகரத்திற்குச் சென்றுவிட்டாள். அங்கு அவளுக்கு விஷ்ணு பக்தர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அதனால் பல விரதங்களை அவள் அனுஷ்டிக்க அவள் பாவங்கள் நீங்கிட, புண்ணியவதியாகி நேராக விஷ்ணுலோகம் அடைந்தாள்.

3. துவாபர யுகத்தில் வாழ்ந்த ஆதித்தியன் என்ற அந்தணன் துளசிச் செடிகளுக்குத் தினமும் நீரூற்றி வளர்த்து வந்தான். அந்த ஊரிலேயே ஒரு சண்டாளன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் நீர் வேட்கை அடைந்த அவன் துளசிப் பாத்தியில் இருந்த துளசி நீரை எடுத்து அருந்தினான். இதனால் புண்ணியமடைந்தான். அவன் அஸ்மந்தனன் என்ற வேடனால் கொல்லப்பட்டான். அவன் இறந்தவுடன் துளசிதீர்த்த மகிமையால் பாவங்கள் நீங்கி அவன் விஷ்ணுலோகம் அடைந்தான்.

4. திரேதா யுகத்தில் வாழ்ந்த தண்டகரன் என்பவன் மது, மாது, புலால் உண்ணல் மற்றும் வேதங்களைத் தூஷணை செய்தல் போன்ற பாவங்களைச் செய்ததால் அவன் உற்றார், உறவினர், நண்பர்கள் அவனை வெறுத்து ஒதுக்கினர். மேலும் காட்டில் அவன் வழிப்பறிக் கொள்ளை செய்தும் வந்தான். ஒருநாள் அவன் விஷ்ணு பக்தர்களாகிய பிராமணர்களைத் தற்செயலாகச் சந்தித்தான். அவர்கள் அவனுக்குச் சில விரதங்கள் பற்றிக்கூறி அனுஷ்டிக்குமாறு அறிவுரை கூறினர். அவனும் அவ்வாறே விஷ்ணுவுக்குப் பிரியமான விரதங்களை அனுஷ்டித்து பாவங்கள் நீங்கப் பெற்று நல்லுலகம் அடைந்தான்.

20. மது கைடபர்கள்

எங்கும் நீர்மயம். மகாவிஷ்ணுவின் யோகதுயில். தன் நாபியிலிருந்து ஒரு கமலத்தைத் தோற்றுவித்தார். பிரமன் உலகையும், அதிலுள்ள ஜீவராசிகளையும் படைக்க முற்பட்டார். அப்போது சாதுக்களிலிருந்து மது கைடபர்கள் என்ற இரண்டு அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் சகல லோகங்களில் வசிப்பவர்களையும் நடுங்குமாறு அக்கிரமங்கள் செய்து வரலாயினர். பிரம்மனையே எதிர்க்க முற்பட, அவர் ஸ்ரீவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார். பலகாலம் போர் செய்தும் ஸ்ரீவிஷ்ணு அவர்களை வெல்ல முடியவில்லை. எனவே திருமால் மாய உபாயம் செய்து அவர்கள் மனதில் மோகத்தை உண்டாக்கினார். அந்த மோகத்தில் மூழ்கிய அவர்கள் விஷ்ணுவை நோக்கி, உன்னுடைய யோகத்திறன் கண்டு மெச்சினோம். வேண்டும் வரம் கேள் என்றனர். உடனே விஷ்ணு, நீங்கள் இருவரும் என் கையால் மரணமடையும் வரம் வேண்டும் என்றார். அப்போது எங்கும் நீர் சூழ்ந்திருந்ததால், அவர்கள் நீரில்லா இடத்திலானால் உம் எண்ணம் நிறைவேறும் என்றனர். உடனே விஷ்ணு அவர்களைத் தொடை மீது அமர்த்தி சக்கரத்தால் அவ்விருவர் தலைகளையும் அறுத்தார். இவ்வாறு மது கைடபர்கள் அழிந்தனர்.

21. கங்கை ஆறு உற்பத்தியாதல்

சூதர் கங்கோற்பத்தி பற்றி முனிவர்களுக்குக் கூறினார்.

கங்கை நதி விஷ்ணு பாதத்தில் தோன்றி விஷ்ணு பதி என்று பெயர் பெற்றது. சகர சக்கரவர்த்தி அஸ்வமேத யாகத்தை முன்னிட்டு ஒரு குதிரையைத் தன் புத்திரர்கள் ஆயிரம் பேர்களுடன் உலகைச் சுற்றி வர ஏற்பாடு செய்தான். பல நாடுகளைக் கடந்து சென்றது அசுவம். சகரச் சக்கரவர்த்தியாக வெற்றியினைக் கண்டு அஞ்சி, இந்திரன் யாகக்குதிரையை யாரும் அறியாமல் கபிலர் ஆசிரமத்தில் கட்டி வைத்தார். கபிலர் தவம் செய்து கொண்டிருந்ததால் அவர் ஒன்றும் அறியார். பின்னர் சகரப் புத்திரர்கள் பாதாள உலகம் சென்று கபிலரையும், குதிரையையும் கண்டு கபிலர் கபடநாடகம் ஆடுவதாக எண்ணி அவர் தவத்தைக் கெடுக்க முயல அவர் கோபத்துடன் அவர்களை நோக்க அவர்கள் அனைவரும் எரிந்து சாம்பல் ஆயினர். சில காலத்திற்குப் பின், பகீரதன் பிறந்து தவம் செய்து கங்கையை உலகுக்குக் கொண்டுவர முயற்சித்தான். பிரமனை நோக்கியும், பின்னர் அவர் சொல்படி மகாதேவனைக் குறித்தும் தவம் செய்ய சிவபெருமான் தோன்றிட பகீரதன் மோக்ஷம் பெற வழி காண விரும்புவதாகக் கூற, அவர்கள் மீது கங்கை பிரவகித்தால் அவர்கள் உய்வர் என்று கூறினார் சிவபெருமான். அதை அறிந்த பகீரதன் கங்கையை நோக்கி தவம் செய்தான். அவள் தோன்றி என்ன வேண்டுமென்று கேட்க, மூதாதையர் சாம்பல் மீது பாய்ந்து அவர்களை மோக்ஷமடையச் செய்யுமாறு வேண்டிட, கங்காதேவி தான் மேலுலகிலிருந்து புவியில் இறங்கும் போது தன்னைத் தாங்க வல்லவர் ஒருவர் தேவை என்றும், இல்லாவிட்டால் பூமியைத் துளைத்து பாதாளம் சென்று விடுவேன் என்று கூறி, அதற்கு வல்லவர் சிவபெருமான் ஒருவரே என்றும், அவர் உதவியை நாடுமாறும் கூறினாள். பகீரதன் மறுபடியும் சிவபெருமானை வேண்டி உதவுமாறு கேட்டான். அவரும் கங்கையை வருமாறு வேண்டு என கங்கை ஆவிர்ப்பவித்து வந்தாள். பரமன் அவளைத் தாங்கி நின்றார். பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக பூமியில் விட கங்கை பாதாளத்தில் கபிலரால் மரணமடைந்து சாம்பலாகியுள்ள இடத்தில் பெருக்கெடுத்து ஓட அவர்கள் புனிதம் பெற்று மோக்ஷம் அடைந்தனர். எனவே, கங்கையை நினைத்து அதில் நீராடினாலும், அந்த நீர் காற்று மேலே பட்டாலும் புண்ணியங்கள் பெற்று புண்ணியலோகம் அடைவர்.

22. கால கல்பனின் சரிதம்

முன்னொரு காலத்தில் மதுரை நகரில் சோமசேகர சர்மா என்ற ஒரு பிராமணர் விசாலாட்சி என்ற தன் மனைவியுடன் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் புனித தீர்த்த யாத்திரை புறப்பட்டனர். அவர்கள் கங்கை ஆற்றை அடைந்து கங்காஸ்நானம் செய்து, கங்கை நீரைக் கலசத்தில் நிரப்பிக் கொண்டு அதனை துளசி தளத்தின் நடுவில் வைத்துக் கொண்டு கால்நடையாக வந்து கொண்டிருந்தனர். அவருக்கெதிரில் மேல் நாட்டிலிருந்து வந்த வர்த்தகன் ஒருவன் சாக்குகளுடன் வந்து கொண்டிருந்தான். அவன் தனது இரட்டை மாட்டு வண்டியில், காலகல்பன் என்பவன் வண்டி ஓட்ட அம்மாடுகளில் ஒன்று கிழட்டு மாடாகவும், மற்றது பலமுடையதாகவும் இருந்தது. காலகல்பன் அந்தக் கிழட்டு மாட்டைத் திருப்பித் திருப்பி அடித்து ஓட்ட அதற்குள் வண்டியும் உடைந்து அதன் மேல்பட அது கீழே விழுந்தது. பின்னர் ஒருவாறு தெளிந்து தன் கூரிய கொம்புகளால் காலகல்பனைப் பலமுறை குத்திட அவன் மூர்ச்சித்து விழுந்து இறுதியில் மரணாவஸ்தையில் இருந்தான். அப்போது அவ்வழியில் வந்து கொண்டிருந்த சோமசேகர சர்மா அவனுடைய நிலையைக் கண்டு பரிதாபப்பட்டார். அவன் வாயில் கங்கை நீரை ஊற்றினார். ஸ்ரீஹரியைப் பூஜித்து அவன் உடலில் தெளித்தார். துளசியை உடல்மீது வைத்து விட்டுத் தன் வழியே சென்றார். அந்த காலகல்பன் அந்த இடத்திலேயே உயிரை விட்டான். பின்னர் சோமசேகர சர்மா வழியில் சிலர் நன்கு உதைபட்டு, அடிபட்டு நடக்க முடியாமல் அவதிபட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு அவர்களை விசாரிக்க அவர்கள் தாங்கள் யமதூதர்கள் என்றும், அவர்களுக்கும் விஷ்ணு தூதர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையே இதற்குக் காரணம் என்றனர். காலகல்பன் உயிரைக் கொண்டு போக வந்த எங்களைத் தடுத்து விஷ்ணு தூதர்கள் அவன் பாவி அல்ல என்றும், புண்ணியாத்துமா என்றும் எந்தப் பாபமும் அவனுக்குத் தெரியாதென்றும் மரணா வஸ்த்தையிலிருந்த போது கங்கை நீரும், துளசியும் அருந்தினான் என்றும், அவன் உடல்மீது துளசிகளை வைத்துக் கொண்டான் என்றும், நாராயண நாமஸ்மரணம் கேட்டான் என்றும் கூறி காலகல்பனை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர் என்றும் கூறினர். அதுகேட்ட சோமசேகர சர்மா கங்கையின் மகிமை, துளசியின் பவித்ரம், அந்திம காலத்தில் நாராயண நாம ஸ்மரணம் ஆகியவற்றின் பலனைக் கண்களுக்கு எதிரிலேயே அறிந்தார்.

திருமால் உடற்கூறும், புராணங்களும்

1. பிரம்ம புராணம் - தலை
2. பத்ம புராணம் - இதயம்
3. விஷ்ணு புராணம் - வலது கை
4. சிவ புராணம் - இடது கை
5. பாகவத புராணம் - தொடைகள்
6. நாரத புராணம் - நாபி
7. மார்க்கண்டேய புராணம் - வலது பாதம்
8. அக்னி புராணம் - இடது பாதம்
9. பவிஷ்ய புராணம் - வலது முழங்கால்
10. பிரம்மவைவர்த்த புராணம் - இடது முழங்கால்
11. லிங்க புராணம் - வலது
12. வராஹ புராணம் - இடது
13. கந்த புராணம் - உடல் ரோமம்
14. வாமன புராணம் - தோல்
15. கூர்ம புராணம் - முதுகு
16. மத்ஸ்ய (மச்ச) புராணம் - உடற்கொழுப்பு
17. கருட புராணம் - எலும்பில் உள்ள ஊன்
18. பிரம்மாண்ட புராணம் - எலும்புகள்

இவ்வாறு புராணங்கள் அனைத்தும் திருமால் உருவிலே அறியப்படுவதால் இவற்றைப் படிப்பதால் புண்ணியம் சேரும்!

பத்ம புராணம் முற்றிற்று.

 
மேலும் பத்ம புராணம் »
temple news
1. தோற்றுவாய் வேத வியாசர் எழுதிய பதினெண் புராணங்களில் இரண்டாவது பத்ம புராணம். இது 55,000 ஸ்லோகங்கள் கொண்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar