இந்த உலகில் பிறந்தேன். பள்ளி பருவத்தில் மாநில அளவில் தேர்ச்சி பெற்றேன். ஊரே பாராட்டியது. பரிசுகள் குவிந்தன. மேலும் படித்து இன்ஜினியர் ஆனேன், தொழிற்சாலை துவங்கினேன். அமோக லாபம் அடைந்தேன். பெற்றோர் மகிழ்ந்தனர். மனைவி மகிழ்ச்சியில் திளைத்தாள். என் பணத்தில் பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு வீடு, கார் வாங்கிக் கொடுத்தேன். சர்வதேச நாடுகள் என் சாதனையைப் பாராட்டி விருதுகள் அளித்தன. இப்போது ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தான் நான் தங்குகிறேன். எப்போதும் விமானங்களில் பறக்கிறேன். என் வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கிறது’’ இப்படி ஒருவர் பெருமைப்படுகிறாரா? நிச்சயமாக அவர் சாதனையாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது பணத்தால் சமுதாயத்திற்கு பலன் ஏதும் கிடைத்ததா என்றால் இல்லை. இதற்கு மாறாக நல்ல மனிதர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஜோனாஸ்சால்க். புளு காய்ச்சல் பரவிய காலத்தில் மருந்து கண்டுபிடிக்கும் பணியை அரசு இவரிடம் ஒப்படைத்தது. வெற்றிகரமாக செய்து முடித்து பரிசு பெற்றார். அவரது குடும்பத்தினர் பெருமிதம் கொண்டனர். ஆனால் பணம் கிடைத்தும் ஜோனாசின் மனதில் வெறுமை நிலவியது. உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் போலியோவால் நடக்க முடியாமல், கை கால்களை அசைக்க முடியாமல் வாழ்கிறார்களே என அடிக்கடி வருந்தினார். குழந்தைப் பருவத்திலேயே போலியோ வராமல் தடுக்க வேண்டும் என மருத்துவக் குழுவினருடன் ஆலோசித்தார். நீண்டநாள் உழைப்பின் பயனாக மருந்து கண்டுபிடித்ததும் வெறுமை மறைந்தது. மனநிறைவு பெற்றார். இன்று உலகமே அவரது சாதனையை வாழ்த்துகிறது. தனிப்பட்ட சாதனைக்காக விருது பெறுவதை விட, மற்றவர்களுக்கு உதவுவதற்கு கல்வியும், அறிவும் பயன்பட வேண்டும் அதுவே நிஜமான வெற்றி. விஞ்ஞானியின் உழைப்பால் உலகெங்கும் உள்ள குழந்தைகள் போலியோ தடுப்பு மருந்தால், இன்று நிமிர்ந்து நடக்கிறார்கள். ‘‘நீதிமான் கஞ்சத்தனம் இல்லாமல் கொடுப்பான்’’. ஆம்...உங்களிடம் உள்ள நல்லதை கஞ்சத்தனமின்றி கொடுங்கள். இந்த உலகம் என்றென்றும் உங்களை நினைவில் கொள்ளும்.