முல்லா வசித்த பகுதியில் நீண்ட நாளாக நீதிபதி நியமிக்கப்படவில்லை. இது குறித்து மன்னரிடம் மக்கள் முறையிட்டனர். ‘‘தற்பெருமை இல்லாத அடக்கமான ஒருவரை நீதிபதியாக நியமிக்க விரும்புகிறேன். அதற்கு தகுதி படைத்தவர் யாரும் கிடைக்கவில்லை’’ என்றார் மன்னர். இதை கேள்விப்பட்ட முல்லா, ஒரு நாள் காலையில் பழைய மீன் பிடிக்கும் வலையை தோளில் சுமந்தபடி அரண்மனைப் பக்கமாக சென்றார். உப்பரிகையில் உலாவிய மன்னர் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். பணியாளனை அனுப்பி அழைத்து வந்து, ‘‘முல்லா நீர் ஏன் மீன் வலையைப் போர்த்திக் கொண்டு உலாவுகிறீர்?’’ எனக் கேட்டார். ‘‘மன்னா! அந்த காலத்தில் மீன் பிடிக்கும் தொழில் செய்தே வாழ்ந்தேன். என்னதான் வாழ்வில் உயர்ந்தாலும், மக்கள் மத்தியில் பிரபலமானாலும் பழைய காலத்தை மறக்கலாமா? அதனால் இப்போது மீன் பிடிக்கச் செல்கிறேன்’’ என்றார் முல்லா. தான் எதிர்பார்த்த அடக்கமான மனிதர் இவரே என மன்னர் சந்தோஷப்பட்டார். உடனே முல்லாவை இப்பகுதிக்கான நீதிபதி என உத்தரவிட்டார். சிலமாதம் கடந்தது. அரண்மனை வழியாகச் சென்ற முல்லாவை உப்பரிகையிலிருந்து மன்னர் கண்டார். அவரிடம் மீன் வலை இல்லாமல் நடந்து செல்வதைக் கவனித்தார். ‘‘என்ன முல்லா கையில் மீன் வலையைக் காணோமே’’ எனக் கேட்டார் மன்னர். ‘‘மன்னா! மீனைப் பிடித்த பிறகு வலை தேவையில்லையே?’’ என்றார் முல்லா. மீன் எனக் குறிப்பிட்டது ‘நீதிபதி பதவி’ என்பது மன்னருக்கு புரியவில்லை.