பதிவு செய்த நாள்
21
நவ
2020
03:11
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 15ம் தேதி காப்பு கட்டுதலுடன், கந்த சஷ்டி விழா துவங்கியது. கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாளில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. கொரோனா தொற்று காரணமாக, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சியின் போது பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின் போதும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளான இன்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்துடன் காட்சி அளித்தார். காலை, 8:30 மணிக்கு, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. அதன்பின், வள்ளி, தெய்வானை சமேதர சுப்பிரமணிய சுவாமி பல்லக்கில் திருவீதி உலா வந்தார். திருக்கல்யாணத்தை ஒட்டி, காலை, 7:00 முதல் 10:30 மணி வரை கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதன்பின், பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி விழாவையொட்டி விரதமிருந்த பக்தர்கள், தங்களது விரதங்களை நிறைவு செய்தனர்.