பதிவு செய்த நாள்
21
நவ
2020
05:11
சேலம்: முருகன் கோவில்களில், பக்தர்கள் இல்லாமல், சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. சேலம், உடையாப்பட்டி, கந்தாஸ்ரமத்தில், சூரசம்ஹார விழாவையொட்டி, நேற்று மாலை, முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து, சூரபத்மனை வதம் செய்யும் சம்ஹாரம் நடந்தது. இதில், குறைந்த அளவில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். பேர்லேண்ட்ஸ் முருகன் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். அம்மாபேட்டை, குமரகிரி தண்டாயுதபாணிக்கு, 1,008 லிட்டர் பால் அபி ?ஷகம், சிறப்பு பூஜை நடந்தது. அம்மாபேட்டை, செங்குந்தர் குமரகுரு சுப்ரமணியருக்கு, முத்தங்கி கவச சாத்துபடி, கந்த சஷ்டி பாராயணம் நடந்தது. இதில், நிர்வாகிகள் மட்டும் வழிபட்டனர்.
ஊத்துமலை முருகன், செவ்வாய்ப்பேட்டை, சித்திரைச்சாவடி முருகன், ஏற்காடு ஆறுபடை முருகன், ஜாகீர்அம்மாபாளையம், காவடி பழனியாண்டவர் ஆசிரமம் ஆகியவற்றில், சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வு, பக்தர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. இன்று, அனைத்து முருகன் கோவில்களில் திருக்கல்யாணம் நடக்கிறது.
வெற்றிவேல், வீரவேல் கோஷம்: சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சி, கோவிலுக்கு உள்ளேயே நடந்தது. இதில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மாலை, கையில் சக்திவேல் ஏந்தியபடி, கந்தசாமி போர்க்கோலத்தில் எழுந்தருளினார். அவருக்கு எதிரே, அசுரர்கள் போர் செய்ய காத்திருந்தனர். இதைக்காண, திரளான பக்தர்கள் கோவில் முன் குவிந்தனர். அவர்கள், கோவில் உள்ளே நடக்கும் நிகழ்ச்சிகளை, பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அரோகரா, வெற்றிவேல், வீரவேல் கோஷம் முழங்க, கந்தசாமி கோவிலை சுற்றிவந்து, ஒவ்வொரு திசையில் யானை முக சூரன், சிங்கமுக சூரன், ஆடுமுக சூரன் இறுதியாக சூரபத்மனை, சக்திவேல் கொண்டு அழித்தார்.