பதிவு செய்த நாள்
22
நவ
2020
05:11
திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, 7 டன் மலர்களால் வருடாந்திர புஷ்ப யாகம் நடந்தப்பட்டது.
திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் முடிவடைந்த பின், கார்த்திகை மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில், புஷ்ப யாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.இதன்படி, நேற்று கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமிக்கு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. காலையில், உற்சவ மூர்த்திகளை சம்பங்கி பிரகாரத்தில் எழுந்தருளச் செய்து, அவர்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.உற்சவ மூர்த்திகளுக்கு பட்டாடை அணிவித்து, நிவேதனம் சமர்ப்பித்து, கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, அர்ச்சகர்கள் புஷ்பயாகத்தை துவங்கினர். பின், ஏழுமலையான் கோவிலுக்குள், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமியை தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து, ரோஜா, சம்பங்கி, மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, சாமந்தி, தாமரை, அல்லி, தாழம்பூ உள்ளிட்ட மலர்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்காக ஏழு டன் மலர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தது.