பதிவு செய்த நாள்
23
நவ
2020
08:11
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே உள்ள விருட்ச பீடத்தில், புதிதாக அமைத்த, 27 நட்சத்திர சித்தர்கள் திருமேனிகள், பஞ்சலிங்கங்கள், பாதாள லிங்கம் ஆகியவற்றின் கும்பாபிஷேகம், வருகிற, 26ம் தேதி நடைபெற உள்ளது.
சிறுமுகை அடுத்த கிச்சகத்தியூரில் விருட்சபீடம் உள்ளது. இங்கு 27 நட்சத்திரங்களுக்கு உண்டான விருட்சங்கள் (மரங்கள்) வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிதாக, 27 சித்தர்கள் திருமேனிகளும், பஞ்சலிங்கங்கள், பாதாள லிங்கம் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் கும்பாபிஷேக விழா, 24 ஆம் தேதி வேள்வியுடன் துவங்குகிறது. அன்று காலை பவானி ஆற்றிலிருந்து புனித தீர்த்த குடங்களும், முளைப்பாலிகையை ஊர்வலமாக எடுத்து வருகின்றனர். மாலையில் திருவிளக்கு ஏற்றுதல், புனித நீர் வழிபாடு, பிள்ளையார் வழிபாடும், முதல்கால வேள்வியும் துவங்குகிறது 25 ஆம் தேதி காலை திருப்பள்ளி எழுச்சியும் இரண்டாம் கால வேள்வியும், மாலையில் மூன்றாம் கால வேள்வியும், ஆதிபராசக்தி, பஞ்சலிங்கம், பாதாள லிங்கம் ஆகியவற்றுக்கு, எண் வகை மருந்து சாத்துதலும், திருநீறு பிரசாதம் வழங்குதல், அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன.
விழாவின் முக்கிய நாளான, 26 ஆம் தேதி காலை 7:00 மணிக்கு காப்பு அணிவித்தலும், நான்காம் கால யாக வேள்வியும் நடைபெறுகிறது. 7: 35 மணியிலிருந்து, 8:30 மணிக்குள் தீர்த்தக் குளங்கள், விருட்ச பீடத்தை வலம் வந்து, பஞ்ச லிங்கங்கள், பாதாள லிங்கம், 27 நட்சத்திரங்களுக்கான சித்தர் திருமேனிகளுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பேரூராதீனம் சாந்தலிங்க சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், குமாரதேவ சாமிகள் திருமட ஆதீனம் ரத்தின வேலாயுத சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார், முத்து சிவராமசாமி அடிகளார், சிவலிங்கேஸ்வர சுவாமிகள், மவுன சிவாச்சல அடிகளார், காமாட்சி தாச அடிகளார், பொன் மணிவாசக அடிகளார், கிருஷ்ணமூர்த்தி அடிகளார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் விழாவில் பங்கேற்கின்றனர். கும்பாபிஷேக விழாவில், நகைச்சுவை பட்டிமன்றம், ஆன்மீக பட்டிமன்றமும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விருட்ச பீடம் சாக்த லட்சுமி தாச சுவாமிகள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.