பதிவு செய்த நாள்
23
நவ
2020
12:11
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 95வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தியில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 95 வது பிறந்த நாளை முன்னிட்டு, புட்டபர்த்தில் உள்ள ஹில்வியூ ஸ்டேடியத்தில், பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். சாய்பாபாவின் திருஉருவப் படம் தங்கரதத்தில் வைத்து கொண்டு வரப்பட்டது. திருஉருவப் படத்திற்கு மலர் துாவப்பட்டு, சிறப்பு வழிபாடு, இசைநிகழ்ச்சிகள் நடந்தன.
சாய்பாபா அவதார புருஷராகவும் ஆன்மிக குருவாகவும் போற்றப்படுபவர். இந்தியாமட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள் மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார். இவருடைய பெயரில் 1200க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகெங்கிலும் செயல்படுகின்றன. இன்று (நவ., 23) சாய்பாபாவின் 95வது அவதார நாளை முன்னிட்டு, உலகம் முழுவதும் 120 நாடுகளில், அன்னதானம், மருத்துவ முகாம், சிறாருக்கு ஒழுக்கக் கல்வி மற்றும் பல பொதுச் சேவைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை உள்ளத்துடன் முதலில் சென்று உதவுபவர்கள் சாய் நிறுவனத்தின் இயற்கைப் பேரிடர் நிவாரணப் பிரிவுதான் என்பது குறிப்பிடத்தக்கது. விழா நிகழ்ச்சிகளை https://www.youtube.com/watch?v=JGhDHWF5EqA என்ற பிரசாந்தி மந்திர் லைவ் சேனல் மற்றும் srisathyasaibaba என்ற பேஸ்புக் பகுதிக்கு சென்று நேரலையில் காணலாம்.