பதிவு செய்த நாள்
24
நவ
2020
09:11
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே உள்ள விருட்ச பீடத்தில், வாஸ்து பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. சிறுமுகை அடுத்த கிச்சகத்தியூரில் விருட்சபீடம் உள்ளது.
இங்கு, 27 நட்சத்திரங்களுக்கு உண்டான விருட்சங்கள் (மரங்கள்) வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 27 சித்தர்கள் திருமேனிகளும், பஞ்ச லிங்கங்கள், பாதாள லிங்கம் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் கும்பாபிஷேக விழா, இன்று வாஸ்து பூஜை மற்றும் முதல் கால வேள்வியுடன் துவங்குகிறது. காலையில் பவானி ஆற்றிலிருந்து புனித தீர்த்த குடங்களையும், முளைப்பாரிகளையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். நாளை காலை இரண்டாம் கால வேள்வியும், மாலையில் மூன்றாம் கால வேள்வியும், ஆதிபராசக்தி, பஞ்சலிங்கம், பாதாள லிங்கம் ஆகியவற்றுக்கு, எண் வகை மருந்து சாத்துதலும், திருநீறு பிரசாதம் வழங்குதல், அன்னதானம் ஆகியவை நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நாளான, 26 ஆம் தேதி காலை, 7: 35 மணியிலிருந்து, 8:30 மணிக்குள், பஞ்ச லிங்கங்கள், பாதாள லிங்கம், 27 சித்தர் திருமேனிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை விருட்ச பீடம் சாக்த லட்சுமிதாச சுவாமி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.