பதிவு செய்த நாள்
25
நவ
2020
12:11
மேட்டுப்பாளையம்:ஆண்டுக்கு, ரூ.8 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், பூசாரிகள் இல்லாததால், பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு, தினமும் 100க்கணக்கான பக்தர்களும், செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். தற்போது கோவிலில் நன்கொடையாளர்கள் வாயிலாக, திருப்பணிகள் நடைபெறுகின்றன. கோவிலின் உள்ளே அம்மன், சிவன் சன்னதிகளும், வெளியே பகாசூரன், நாகர், பவானி ஆற்றின் கரையோரம் முத்தமிழ் விநாயகர் ஆகிய சன்னதிகளும் உள்ளன.தவிர, கொடிமரம் முன்பாக, வாகனங்களுக்கு பூஜை நடத்தப்படும். கோவிலுக்கு, மொத்தம், 13 பூசாரிகள் தேவைப்படுவர்.
இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பூசாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்களை நியமனம் செய்யும் அதிகாரம், பரம்பரை அறங்காவலரிடம் உள்ளது.தற்போது இக்கோவிலில், பூசாரிகள் ஓய்வு பெற்றதாலும், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாலும், ஒரு பூசாரிகள் கூட இல்லை. அதனால், பரம்பரை அறங்காவலர், தற்காலிகமாக மூன்று பூசாரிகளை நியமித்துள்ளார்.கோவிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, கடைகளின் வாடகை என, ஆண்டுக்கு, 8 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இவ்வளவு வருவாய் கிடைத்த போதிலும், ஒவ்வொரு சன்னதியிலும், பூஜை செய்ய பூசாரிகள் இல்லை என்பதுதான், வேதனை அளிக்கிறது என, பக்தர்கள் தெரிவித்தனர்.கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே, கோவிலுக்கு, உடனடியாக பூசாரிகள் நியமனம் செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கோவில் உதவி கமிஷனர் ஹர்ஷினி கூறியதாவது:கோவில் பூசாரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் நியமனம் செய்யும் அதிகாரம் பரம்பரை அறங்காவலரிடம் உள்ளது. அவர் தீர்மானம் நிறைவேற்றி கொடுத்தால், அரசின் கவனத்துக்கு அனுப்பி, இந்து சமய அறநிலைத்துறை அனுமதி பெற்ற பாடசாலையில் படித்து, சான்று பெற்றவர்களை மட்டுமே பூசாரியாக தேர்வு செய்யப்படுவர். அதனால், பூசாரிகளை நியமனம் செய்ய, தீர்மானம் நிறைவேற்றி தரும்படி பரம்பரை அறங்காவலருக்கு அனுப்பிய போது, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இதுகுறித்து பின்னர் பரிசீலனை செய்யப்படும் என எழுதியுள்ளார். அதனால், பூசாரிகள் நியமனம் செய்யப்படாமல் உள்ளது, என்றார்.வனபத்ரகாளியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தாவிடம் கேட்டபோது, கோவிலுக்கு தேவையான, 13 பூசாரிகளை நியமனம் செய்ய, நிர்வாகத்துக்கு எழுதி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், பக்தர்கள் வசதிக்காக, தற்போது தற்காலிகமாக, 3 பூசாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர், என்றார்.