பொங்கலுார்:பொங்கலுார் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நகை, பல ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போனது.பொங்கலுார் ஒன்றியம், எஸ். வேலாயுதம்பாளையத்தில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. தொட்டிய பாளையத்தைச் சேர்ந்த ராசுகுட்டி, 48 என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டி, சென்றார்.நேற்று காலை பார்த்ததில், கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒன்பது கிராம் தங்க மாங்கல்யம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.இதேபோல், காட்டூர் மாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து அம்மனுக்கு அணிவித்திருந்த, ஒன்றேகால் பவுன் தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். பட்டத்தரசி அம்மன் கோவிலில் ஒரு பவுன் நகை மற்றும் உண்டியலில் இருந்த பணம் திருடு போனது.வெள்ளநத்தம் கரியகாளியம்மன் கோவிலில் அரை பவுன் தங்கம் மற்றும் கோவில் உண்டியலில் இருந்த பணம் திருடுபோனது. இவ்வாறு, அம்மன் கோவில்களை குறி வைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களில் திருட்டு தொடர்பாக, காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.