பதிவு செய்த நாள்
26
நவ
2020
12:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆறாம் நாள் தீப திருவிழாவில், கொட்டும் மழையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா கடந்த, 20ல், கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று ஆறாம் நாள் விழாவில், அதிகாலை அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, விநாயகர் மற்றும் சந்திரசேகரர், கொட்டும் மழையில், ஐந்தாம் பிரகார வலம் கொண்டு வரப்பட்டனர். அப்போது, பக்தர்கள் மழையை பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து இரவு, பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், ஆகியோர் தனித்தனியாக ஐந்தாம் பிரகாரத்தில் உலா வந்தனர். வழக்கமாக ஆண்டுதோறும், ஆறாம் நாள் விழாவில் வெள்ளி ரதத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வீதி உலா வருவது வழக்கம். இந்த ஆண்டு, கொரோனாவால் வெள்ளி ரதத்தில், சுவாமி வீதி உலா வருவது, ரத்து செய்யப்பட்டது.