பதிவு செய்த நாள்
26
நவ
2020
03:11
திருவண்ணாமலை:அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம் ஏற்றவுள்ள கொப்பரை, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது.
வரும், 29ல், அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறை எதிரில், பஞ்ச பூதங்கள், ஏகன், அனேகன் என்பதை விளக்கும் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில், அனேகன், ஏகன் என்பதை விளக்கும், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதற்காக, 6 அடி உயர ராட்சத கொப்பரை புதுப்பிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. இதில், ஏற்றப்படும் மஹா தீபத்தை, 40 கி.மீ., வரை பார்க்க முடியும்.கொப்பரை, வெப்பத்தால் சேதமாகாமல் இருக்க, மேல்பாகம் மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம் இரண்டே முக்கால் அடி சுற்றளவும், 150 கிலோ எடையில், கால் இன்ச் தடிமன் கொண்டதாகவும், 20 வளைய ராடுடன் கூடிய செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது.கொப்பரைக்கு, காவி வர்ணம் பூசப்பட்டு, சிவ சிவ என்ற வாசகம் எழுதப்பட்டு, விபூதி பட்டையுடன் கூடிய லிங்கம், அர்த்தநாரீஸ்வரர் உருவத்தின் மேல், தீப விளக்கு எரிவது போலும், அதில், அர்த்தநாரீஸ்வரர் உருவாய் எழுவது போலவும் படம் வரையப்பட்டுள்ளது.இந்த கொப்பரை நேற்று கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இது, 28ல், மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, 29ல், மஹா தீபம் ஏற்றப்படும்.