பதிவு செய்த நாள்
26
நவ
2020
04:11
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அடுத்த கிச்சகத்தியூர் ஸ்ரீ விருட்ச பீடத்தில் பஞ்ச லிங்கங்களுக்கும் பாதாள லிங்கத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
சிறுமுகை அடுத்த கிச்சகத்தியூரில் விருட்சபீடம் உள்ளது. இங்கு 27 நட்சத்திரங்களுக்கு உண்டான விருட்சங்கள் (மரங்கள்) வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிதாக, 27 சித்தர்கள் திருமேனிகளும், பஞ்சலிங்கங்கள், பாதாள லிங்கம் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் கும்பாபிஷேக விழா, 24 ஆம் தேதி வேள்வியுடன் துவங்கியது. அன்று முதல்கால வேள்வியும் துவங்கியது. 25ம் தேதி காலை திருப்பள்ளி எழுச்சியும் இரண்டாம் கால வேள்வியும், மாலையில் மூன்றாம் கால வேள்வியும், ஆதிபராசக்தி, பஞ்சலிங்கம், பாதாள லிங்கம் ஆகியவற்றுக்கு, எண் வகை மருந்து சாத்துதலும், திருநீறு பிரசாதம் வழங்குதல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.
விழாவின் முக்கிய நாளான, இன்று (26ம் தேதி) காலை 7:00 மணிக்கு காப்பு அணிவித்தலும், நான்காம் கால யாக வேள்வியும் நடைபெற்றது. 7: 35 மணியிலிருந்து, 8:30 மணிக்குள் தீர்த்தக் குளங்கள், விருட்ச பீடத்தை வலம் வந்து, பஞ்ச லிங்கங்கள், பாதாள லிங்கம், 27 நட்சத்திரங்களுக்கான சித்தர் திருமேனிகளுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் புனித நீரை ஊற்றினார். ஸ்ரீ விருட்சபீட லக்ஷ்மி தாச ஸ்வாமிகள் மற்றும் சிவநெறி தொண்டர்கள் சக்திவேல் குழுவினர், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் விழாவில் பங்கேற்றனர்.