பதிவு செய்த நாள்
27
நவ
2020
10:11
கருமத்தம்பட்டி: வடுகபாளையம் சக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம் பாளையம் ஊராட்சி, வடுகபாளையத்தில் உள்ள ராஜ விநாயகர், சக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள் பழமையானவை. இங்கு திருப்பணிகள் முடிவுற்று, கடந்த, 19 ம்தேதி காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 24ம்தேதி வாஸ்து பூஜையுடன் கவச பூஜை முதல்கால யாக பூஜை நடந்தது. நான்கு கால யாக பூஜைக்குப் பின் நேற்று அதிகாலை 5:15 மணிக்கு ராஜ விநாயகர், சக்தி மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு கோபுரம், பரிவார தெய்வங்கள் மற்றும் மாகாளி யம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.