பதிவு செய்த நாள்
27
நவ
2020
10:11
சென்னை: சென்னையில் உள்ள கோவில் குளங்கள் பல நிரம்பி வருவதால், பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோடம்பாக்கம் மண்டலம், வடபழநி ஆண்டவர் கோவில் குளத்திற்கு, ஜெர்மன் தொழில் நுட்பத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில், மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இத்திட்டம் வாயிலாக, மழை நீர் சுத்திகரிக்கப்பட்டு குளத்தில் சேகரமாகும். இந்நிலையில், நிவர் புயல் தாக்கம் காரணமாக, மூன்று நாட்கள் பரவலாக கொட்டித் தீர்த்த கன மழையால், வடபழநி ஆண்டவர் கோவில் குளம் நிரம்பி, ரம்மியமாக காட்சியளிக்கிறது. அதேபோல், சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவில் குளமும் நிரம்பி உள்ளது.
* திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில், 45 சதவீதம் அளவிற்கு மழை நீர் தேங்கியது. தியாகராஜ சுவாமி கோவில், ஆதிஷேச தீர்த்தக் குளத்தில், மழை நீர் தேங்க ஏதுவாக, 26 லட்ச ரூபாய் செலவில் களிமண் லேயர் அமைக்கும் பணி நடக்கிறது.இந்நிலையில், கன மழை காரணமாக, குளத்தில், இரண்டு படிக்கட்டு அளவிற்கு மழை நீர் தேங்கியது.
* மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளம், சித்திரைக் குளம் ஆகியவை, அப்பகுதியின் நிலத்தடி நீராதாரமாக உள்ளன.கடந்தாண்டு, வறண்டு காணப்பட்ட கபாலீஸ்வரர் கோவில் அருகில், தெற்கு - வடக்கு மாட வீதிகளை இணைக்கும், கிழக்கு குளக்கரை சாலையில், மாநகராட்சியினர், புது தொழில்நுட்பத்துடன் வடிகால் அமைத்தனர். அதே போல், சித்திரைக் குளத்தை சுற்றியுள்ள, மசூதி தெரு, சோலையப்பன் தெரு உள்ளிட்ட தெருக்களில், ஜெர்மன் தொழில்நுட்பத்துடன், புதிதாக மழை நீர் வடிகால் அமைக்கப் பட்டது. இதன் காரணமாக, இரண்டு கோவில் குளங்களிலும் தண்ணீர் சேகரமானது.
இது குறித்து, மாநகராட்சி செயற்பொறியாளர் இனியன் கூறியதாவது:நேற்று முன்தினம் இரவு, கபாலீஸ்வரர் கோவில் குளத்தை, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆய்வு செய்தார். மழை நீர் வடிகால் கட்டமைப்பு, நீர்வரத்தை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நேற்று காலை நிலவரப்படி, 5 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. சித்திரைக் குளத்தில், நேற்று காலை, 4 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். சென்னையில் உள்ள கோவில் குளங்களில் தண்ணீர் சேகரமாகி வருவது, பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.