பதிவு செய்த நாள்
02
டிச
2020
11:12
சென்னை:சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், கொரோனா பரிசோதனை முடிவுகளை, இரண்டு நாட்களுக்கு பயன்படுத்தலாம், என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறினார்.
கேரள மாநிலம், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு, கொரோனா தொற்று பரவல் காரணமாக, அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், தரிசன நேரத்திற்கு முன், 24 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனா தொற்றின்மை சான்று கட்டாயம்; ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்ட, 10 வயதுக்கு கீழ் உள்ள சிறார்; 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்; நாள்பட்ட நோயாளிகள், சபரிமலை செல்ல அனுமதி இல்லை என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று பரிசோதனை செய்தால், மறுநாள் தான் முடிவு கிடைக்கிறது; அப்புறம் எப்படி, 24 மணி நேரத்திற்குள், சபரிமலை சென்று தரிசனம் செய்ய முடியும் என, பக்தர்கள் புலம்புகின்றனர். இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில், கொரோனா பரிசோதனை முடிவுகள் விரைந்து வழங்கப்படுகின்றன. சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், கொரோனா பரிசோதனையை, அரசு ஆய்வகங்களில் செய்து கொள்ளலாம்.அந்த ஆய்வகங்களில் தரப்படும் சான்றை, இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தலாம். எனவே, அய்யப்ப பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.