தர்மங்களை உபதேசிக்கும் அறிஞர் ஒருவர் ஒருநாள் மதிய வேளையில் முல்லாவை சந்தித்தார். உணவு விடுதி எங்கிருக்கிறது எனக் கேட்டார். முல்லாவும் பதிலளிக்க, நீங்களும் வாருங்கள். சாப்பிட்டு வரலாம் என அழைத்தார். விடுதியில் நுழைந்ததும், ‘இன்று விசேஷமான உணவு இருக்கிறதா?’ எனக் கேட்டார் முல்லா. ‘நெய் மீன்!’ என பதில் வந்தது. ‘ இரண்டு வறுத்த மீன் துண்டுகள் கொண்டு வாருங்கள்’ என்றார் மீன் வந்தது. அதில் ஒன்று பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் இருந்தது. பெரிய துண்டை முல்லா எடுத்து கொண்டார். அறிஞரின் முகம் சிவந்தது. ‘‘நீங்கள் நடந்து கொள்வது தர்மத்திற்கு விரோதமானது’’ என விளக்கம் அளித்தார். அமைதியுடன் கேட்ட முல்லா, ‘‘ இந்த இடத்தில் நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்றார் ‘‘மனச்சாட்சியுள்ளவன் நான். பெரிய துண்டை உங்களுக்கு கொடுத்திருப்பேன்’’ என்றார் அறிஞர். ‘‘அப்படியா...ரொம்ப நல்லது. இதோ உங்களுக்கான பங்கு’’ என்று சொல்லி சிறிய துண்டை அறிஞரின் தட்டில் வைத்தார் முல்லா.