இளைஞன் ஒருவனின் காலுக்கு அருகில் நாய்க்குட்டி விளையாடிக் கொண்டிருந்தது. கையிலுள்ள பந்தை அவன் எறிய நாய்க்குட்டி ஓடி கவ்விக் கொண்டு வந்தது. இப்படி அவன் எறிவதும், பெறுவதும் தொடர்ந்ததைப் போலவே ஒரே மாதிரியான செயல்களில் தினமும் நாம் ஈடுபடுகிறோம். அதுவே வாரம், மாதம், ஆண்டு என வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது. இது வட்டத்துக்குள் சிக்கிய வாழ்க்கையாகும். உணவு, உடை, உறைவிடம் என அவசியத் தேவைகளைத் தேட ஆரம்பிக்கும் வாழ்க்கை, ஒரு கட்டத்தில் ஆடம்பர நிலைக்கு தாவும். அதிலிருந்து தப்பிக்க நினைத்தாலும் நம்மால் விலக முடியாது. இப்படிப்பட்ட மனிதர்கள் தங்களையே மையமாக்கிக் கொண்டிருப்பர். எதையோ இழந்தது போல பரபரப்பும், பதட்டமும் அவர்களின் மனதில் குடிகொண்டிருக்கும். இதை தவிர்த்தால் மகிழ்ச்சியின் கதவுகள் திறக்கும்.