ஒருமுறை காஞ்சிபுரம் மடத்தில் சிவபெருமானின் பெருமைகள் குறித்து காஞ்சி மகாபெரியவர் பேசினார். ‘‘இந்த பிரபஞ்சம் முழுவதும் கடவுளின் அருட்சக்தி பரவியிருக்கிறது. ஆனால் நம் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் கோயில்களில் மட்டும் கடவுள் உருவத்துடன் காட்சி தருகிறாரே எப்படி என்ற சந்தேகம் ஏற்படலாம். வீ்ட்டில் பெண்கள் நெய் உருக்குவதை பார்த்திருப்பீர்கள். உருக்கப்பட்ட நெய், தண்ணீரைப் போல நிறம் இல்லாமல் இருக்கும். ஆனால் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றினால், சூடு ஆறியதும் வெள்ளை நிறமாக மாறும். நிறமே இல்லாத ஒன்று தான் இப்போது நிறத்துடன் தெரிகிறது. ஆனால் இரண்டும் ஒரே நெய் தான். உருவமற்றவராக இருந்தாலும், நம் இதயத்தில் பக்தி வளரும் போது அதற்கு கட்டுப்பட்டு கடவுள் உருவம் தாங்குகிறார். வெவ்வேறு வடிவங்களில் ஆட்கொள்ள வருகிறார். அவரது மோகன ரூபங்கள் தான் எத்தனை! ஒருபுறம் ஆபரணம் ஏதுமின்றி பிட்சாடன மூர்த்தியாக இயற்கை அழகுடன் காட்சியளிக்கிறார். இன்னொருபுறம் அழகே வடிவெடுத்தவராக சுந்தரேஸ்வரராக மணக்கோலத்தில் அருள்புரிகிறார். சுந்தரம் என்றாலே அழகு என்று தானே பொருள்? பக்தர்களின் பயத்தைப் போக்கி அபயம் தரும் பைரவராக தோற்றம் கொள்கிறார். பக்தர்களுக்கு நேரும் துன்பங்களைப் போக்குபவராக கம்பீரத்துடன் வீரபத்திர சுவாமியாக இருக்கிறார். தரிசிப்பவர் மகிழும்படி நடனமாடும் நடராஜரும் அவரே. அனைத்திற்கும் மேலாக ஞானத்தை அருள்பவராக முனிவர்களுக்கு உபதேசிக்கும் நிலையில் தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். இப்படி அறுபத்து நான்கு கோலங்களில் சிவன் அருள்பாலிக்கிறார். உலகைப் படைக்கும் பிரம்மாவும் அவரே. காக்கும் மகாவிஷ்ணுவும் அவரே. உலகை சம்ஹாரம் செய்து தன்னுள் அடக்கும் சிவனும் அவரே. இப்படி ஒரே அருட்சக்தியே மும்மூர்த்தியாகவும் திகழ்கிறது. சிந்தை குளிர சிவனை வணங்கினால் வாழ்வில் எல்லா நலங்களும் கிடைக்கும்’’ என்றார். காஞ்சி மகாபெரியவரின் விளக்கம் கேட்ட பக்தர்கள் மகிழ்ந்தனர்.