பதிவு செய்த நாள்
04
டிச
2020
01:12
காஞ்சிபுரம்; கச்சபேஸ்வரர் கோவிலில், கடை ஞாயிறு திருவிழாவில், சுவாமியை தரிசிக்க, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், ஞாயிற்றுக்கிழமைகளில், கடை ஞாயிறு திருவிழா நடைபெறும்.அந்நாளில், பக்தர்கள் வந்து, தங்கள் நேர்த்திக்கடனுக்காக, மண் சட்டியில் மாவிளக்கு ஏற்றி, தலையில் சுமந்து சென்று சுவாமியை வழிபடுவர். இவ்வாறு செய்தால், தீராத வியாதி தீரும் என்பது ஐதீகம்.இந்த ஆண்டு, ஊரடங்கு அமலில் உள்ளதால், திருவிழா ரத்து செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை கோவில் மூடப்பட்டது. எனினும், கடந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளில், ஏராளமான பக்தர்கள், கோவில் வெளியே தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, சுவாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில், கோவிலில் அனுமதிப்பது குறித்து, கோவில் செயல் அலுவலர் குமரன் கூறியதாவது:ஊரடங்கு அமலில் உள்ளதால், அரசு உத்தரவின்படி, கடை ஞாயிறு திருவிழா ரத்து செய்யப்பட்டது. கூட்டத்தை தவிர்ப்பதற்காக கோவில் மூடப்பட்டது. எனினும், பக்தர்கள் வருகை காரணமாக, வரும் ஞாயிற்றுக் கிழமைகளில், கோவிலின் உள்ளே தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் வலம் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளி கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.