பதிவு செய்த நாள்
05
டிச
2020
06:12
ஆத்தூர்: சேலம், ஆத்துார், பெரிய மாரியம்மன் கோவிலில், ஐந்து நிலை மற்றும் 38 அடி உயரம் கொண்ட ராஜ கோபுரத்தின் கலசங்கள் மீது, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆத்தூர், வசிஷ்டநதி தென் கரையில், கைலாசநாதர் கோவில் அருகே, 1,000 ஆண்டு பழமையான, சுயம்பாக உருவான பெரிய மாரியம்மன் குழந்தை வடிவத்திலும், செல்லியம்மன் கோவிலில், சப்த கன்னிகள் வழிபாடு செய்த இடமாகவும், அய்யனார், கருப்பணார் கோவில்கள் உள்ளன. கடந்த, 1940ல், ஆத்தூர் நாடு என அழைக்கப்பட்ட பகுதியில், விஷ காய்ச்சல், தோல் வியாதி ஏற்பட்டு பலர் இறந்தனர். இதனால், அங்கு வசித்த பலர் வேறு ஊர்களுக்கு சென்றபோது, அருணாசல செட்டியார், மனைவி பாவாயி குடும்பத்தினர் மட்டும் வெளியேறாமல் இருந்தனர்.
அருணாசல செட்டியாருக்கு நோய் ஏற்பட்டதால், சிறு குடிசையில் இருந்த, பெரிய மாரியம்மன் சுவாமியை வழிபட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது, 20 வயது பெண், செட்டியாரின் உடலை நீவியபோது, நோய் குணமடைந்தது. இதையறிந்த மக்கள், அங்கு, கோவில், மதில்சுவர் எழுப்பி வழிபட்டனர். அக்கோவில் வளாகத்தில், அரசு, வேம்பு மரத்தின் இடையே உள்ள நாகர் சிலைக்கு, நாக தோஷம் வழிபாடு செய்தால் நிவர்த்தி பெறுகிறது. இக்கோவில், மன்னர் காலத்துக்கு பின், தற்போது, புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலை, 7:30 மணிக்கு மேல், 9:00 மணிக்குள், மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், விழா குழுவினர் செய்திருந்தனர்.