சிறுவன் ஒருவன் தன் நண்பனுடன் முதன் முறையாக கடற்கரைக்கு வந்தான். கடல் அலை பாதத்தை வருடியதும் பரவசம் கொண்டான். குளிக்கவும் செய்தான். நீண்ட கடலின் மறுமுனை அடி வானத்துடன் சேர்வதைக் கண்டான். ‘‘வானம் எப்படி கடலோடு இணைகிறது? இவ்வளவு தண்ணீர் இங்கு ஒரே இடத்தில் எப்படி உருவானது?’’ எனச் சிந்தித்தான். ஒரே புதிராக இருந்தது. மாலையில் புறப்படும் போது கடல் நீரை ஜாடியில் எடுத்துக் கொண்டான். ‘‘இந்த தண்ணீரை என்ன செய்யப் போகிறாய்?” என நண்பன் கேட்டான். ‘‘என் தங்கையிடம் காட்டி கடலைப் பற்றி விளக்குவேன்’’ என்றான். இந்த சிறுவனைப் போல நாமும் ஆண்டவரை பற்றி சிந்திக்கிறோம். ஜாடி நீரைக் காட்டி கடலின் பிரம்மாண்டத்தை விளக்க அவனால் இயலாது. ஆண்டவரைப் பற்றிய எண்ணமும் அப்படியே. கடல் நீரை ஜாடியிலே எடுத்த கதையாகத் தானிருக்கும்.