இரண்டு சிறுமிகள் தங்களின் பெற்றோருடன் மகாபெரியவரை தரிசிக்க காஞ்சிபுரம் வந்திருந்தனர். அவர்கள் நான்கு மற்றும் ஆறாம் வகுப்பு படிப்பவர்கள். ஆங்கிலவழியில் படிக்கிறார்கள் என்பது அவர்களின் பேச்சில் தெரிந்தது. மகாபெரியவர் அன்புடன் அருகில் அழைத்து, ‘‘உங்கள் பெயர் என்ன, எந்த ஊர், என்ன வகுப்பு படிக்கிறீர்கள்?’’ என்றெல்லாம் விசாரித்தார். உற்சாகத்துடன், ‘‘மை நேம் ஈஸ்’ என்று ஆரம்பித்து, ‘ஐ யாம் கமிங் ப்ரம்...’ என்று ஊரைச் சொல்லி ‘ஐ யாம் ஸ்டடியிங்...’ என வகுப்பையும் சொல்லி முடித்தனர். ‘‘சந்தோஷம்’’ என்றார். பழத் தட்டை சிறுமிகளின் பக்கம் நகர்த்தி, ‘என்ன பழம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். தயக்கமுடன் பெற்றோரைப் பார்த்தனர். அப்பாவிடம் இருந்து சம்மதம் கிடைத்ததும் பழங்களை எடுத்துக் கொண்டு ‘தேங்ஸ்’ என்றனர். ‘‘உங்களின் அனுமதி கிடைத்த பின்னரே எதையும் வாங்க வேண்டும் என பழக்கி வைத்திருக்கிறீர்களே!’ என பெற்றோரைப் பாராட்டினார் மகாபெரியவர். அவர்களின் முகத்தில் பெருமிதம் வெளிப்பட்டது. ‘‘ஆனால் நீங்கள் சொல்லித் தராத இன்னொரு நல்ல பழக்கத்தை நான் சொல்லித் தரப் போகிறேன்’’ என்றார். சிறுமிகள் ஆவலுடன் பார்த்தனர். பெற்றோரிடமும் எதிர்பார்ப்பபு. ‘‘நான் ஒரு விஷயம் சொன்னால் கேட்பீர்களா?’’ என்றார். ‘‘ஷ்யூர்’’ எனத் தலையசைத்தனர். ‘‘பள்ளிக்கூடத்தில் இங்கிலீஷ் பேசணும்னு கட்டாயப்படுத்தலாம். அது போனால் போகட்டும்.. அங்கே இங்கிலீஷ் பேசுங்கள். ஆனால் வீட்டில் அம்மா, அப்பா, சொந்தக்காரர்களிடம் தமிழில்தான் நீங்க பேசணும். பெற்ற தாய் போல தமிழ் தான் நமக்கு முதல் தெய்வம் என்பதை மறக்கக் கூடாது. என்னைப் போன்ற சன்யாசிகளிடம் தமிழில்தான் பேசணும். கோயிலுக்கு போகும் போது ஸ்லோகத்துடன் தமிழ் பாடல்களையும் பாடணும். எத்தனையோ அருமையான பாட்டெல்லாம் தமிழில் இருக்கே? தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் வீட்டில் கட்டாயம் தமிழில்தான் பேசணும். உங்களால முடியுமா?’’ எனக் கேட்டார் மகாபெரியவர். ‘‘முடியும்! வீட்டில் இனிமேல் தமிழில்தான் பேசுவோம்’’ என்றனர் சிறுமிகள். ‘‘அப்படியானால் இன்னும் ஒரு பழம் எடுத்துக்கலாம்’’ என்றார் புன்சிரிப்புடன். பெற்றோரை அவர்களும் பார்க்கவே அப்பா தலையசைத்தார். ஆளுக்கொரு பழம் எடுத்தனர். ‘‘போயிட்டு வர்றோம் உம்மாச்சித் தாத்தா’’ என அழகு தமிழில் சிறுமிகள் விடைபெற்றபோது மகாபெரியவரின் முகம் மலர்ந்தது.