பதிவு செய்த நாள்
13
ஜன
2021
12:01
சபரிமலை: மகரவிளக்கு நாளில், அய்யப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம் அடங்கிய பவனி, பந்தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது. நாளை மாலை, 6:30க்கு, பொன்னம்பலமேட்டில் மகரஜோதி காட்சி தருகிறது. கேரள மாநிலம், சபரி மலை அய்யப்பன் கோவிலில், இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை மாலை, மகர விளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது.
கொரோனா கட்டுப்பாடுகளால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது.பந்தளம் அரண்மனையில் தான், அய்யப்பன் வளர்ந்தார். சபரிமலை சென்ற பின், அய்யப்பனைக் காண, பந்தளம் மன்னர் ஆபரணங்களுடன் சென்றார்.அதை நினைவு படுத்தும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும், பந்தளம் மன்னர் பிரதிநிதியுடன் திருவாபரணபவனி சபரிமலை வருவதாக வரலாறு கூறுகிறது.நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள், சாஸ்தா கோவிலுக்கு எடுத்து வரப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
மதியம், 12:30க்கு பவனி புறப்படுவதற்கான சடங்குகள் துவங்கின. ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டது.மதியம், 1:00 மணிக்கு சரண கோஷங்கள் முழங்க, திருவாபரண பவனி புறப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளால் போலீசார், தேவசம்போர்டு ஊழியர்கள் மட்டுமே பவனியில் வருகின்றனர். இந்த ஆண்டு பந்தளம் மன்னர் குடும்பத்தில் குழந்தை பிறந்துள்ளதால், ராஜ பிரதிநிதியாக யாரும் பவனியில் வரவில்லை.முக்கிய திருவாபரண பெட்டியை, குருசாமி கங்காதரன் சுமந்து வந்தார். திருவாபரணம் நாளை மாலை, 6:25க்கு சன்னிதானம் வந்து சேரும்.தீபாராதனை முடிந்ததும், பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும்.