Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முசுகுந்த சக்கரவர்த்தி நகுடன் நகுடன்
முதல் பக்கம் » பிரபலங்கள்
கைகேயி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 மே
2012
02:05

கைகேயி பிறந்த கதை: கைகேயியைப் பற்றிப் பலர் பல விதமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்; ஏசுபவர்களும் உண்டு. உத்தமமான கைகேயியைப் பற்றிய உண்மையான தகவல் இதுதான்! துருபதன் மகள் திரௌபதி. ஜனகன் மகள் ஜானகி. பாஞ்சாலன் மகள் பாஞ்சாலி என்பதைப் போல, கேகய மன்னன் மகள் என்பதால் கைகேயி என்று பெயரே தவிர, கைகேயிக்குப் பெற்றோர் வைத்த பெயர் அதுவல்ல. கேகய தேசத்தின் மன்னர் அச்வபதி. தலைசிறந்த தர்மவான். எல்லாக் கலைகளிலும் மிகுந்த அனுபவசாலி. வைச்வானர என்பது வித்தைகளில் மிகவும் தேர்ந்த வித்தை. அதில் அவர் தேர்ச்சி பெற்றவர். அத்துடன் சரஸ்வதி தேவியை உபாசிக்கும் பக்தர். ஒரு நாள் பூஜையை முடித்து எழுந்தார் மன்னர் அச்வபதி. எதிர்பாராத விதமாகக் கையில் வீணையுடன் பால வடிவத்தில் சரஸ்வதிதேவி தரிசனம் தந்தாள். ஆனந்தத்தின் எல்லையை அடைந்த மன்னர், அம்பிகையை வலம் வந்து துதித்தார். தன் உள்ளத்தில் இருந்ததை வெளிப்படுத்தினார். அம்மா! உனக்குச் சமமான குழந்தையை எனக்குத் தந்தருள வேண்டும். இதுவே நான் கேட்கும் வரம்! என வேண்டினார்.

சிரித்தாள் சரஸ்வதி. எனக்குச் சமமாகவா.. சரிதான்! நானேதான் உனக்குப் பெண்ணாக அவதரிக்க வேண்டும். நீ ஒன்று செய். ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று ஸாரஸ்வத இஷ்டீ என்ற யாகம் செய். நான் அந்த யாகத் தீயில் தோன்றி, உனது வீட்டில் உன் குழந்தையாகவே வளர்வேன்! என்று சொல்லிவிட்டு மறைந்தாள் சரஸ்வதி. ஐப்பசி மாத பவுர்ணமியில் சரஸ்வதி சொன்ன ஸாரஸ்வத இஷ்டீ யாகத்தை முறைப்படி செய்தார் அச்வபதி. கௌதம முனிவர், முனிவர்களுக்குத் தலைவராக இருந்து யாகத்தை நடத்தினார். மாலை நேரம். யாக அக்னியில் இருந்து சரஸ்வதிதேவி வெளிப்பட்டாள். தங்க மயமான பாத்திரத்தில் நிறைந்திருந்த அவிர்பாகத்தை (யாகத்தீயில் தேவர்களுக்காகப் போடப்படும் சாதம்) சுட்டிக் காட்டியபடி, அச்வபதி மன்னா! உனது அபரிமிதமான அன்பின் காரணமாக இந்த அவிர்பாகம் மிகவும் இனிமையாக உள்ளது. இதை நான் மட்டும் ஏற்றால் சரியாகாது. இதோ, இங்குள்ள தேவர்கள் அனைவருக்கும் இந்த அவிர்பாகத்தைப் பங்கிட்டுக் கொடு! அப்போதுதான் எனக்கு திருப்தி உண்டாகும்! என்றாள்.

அவிர்பாகம் அங்கிருந்த தேவர்களுக்கெல்லாம் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. தங்களுக்குக் கிடைத்த அவிர்பாகத்தை (சாதத்தை) சிவபெருமானுக்கு சமர்ப்பணம் செய்தார்கள் தேவர்கள். இது ஏன்? சிவபெருமானுக்கு அவிர்பாகம் தராமல் அவரை விலக்கிவிட்டு யாகம் செய்த தட்சனும், அதில் கலந்து கொண்ட தேவர்களும் அவமானப்பட்டு, சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட நேரம் அது. எனவே, தட்ச யாகத்தில் கலந்து கொண்ட பாவம் தீர்வதற்கு அச்வபதி மன்னர் தங்களுக்குத் தந்த அவிர்பாகத்தை சிவபெருமானுக்குச் சமர்ப்பித்தார்கள். ஐப்பசி மாதத்தில் சிவ பெருமானுக்கு நாம் செய்யும் அன்னாபிஷேகத்துக்கு இதுவே மூலாதாரமாக அமைந்துள்ளது. யாகத்தில் அச்வபதி மன்னருக்கு தரிசனம் தந்த தேவி, அவரது பிரார்த்தனைக்கு இணங்கி ஒரு மானிடப் பெண்ணாக, கேகய ராஜனான அச்வபதிக்கு மகளாக அவரிடம் வந்தாள். இவளே கைகேயி. இவளுக்குப் பெற்றோர் வைத்த பெயர் சரஸ்வதி. நாளடைவில், தன் தந்தை பார்த்து வந்த வேலையை தானே பார்க்க ஆரம்பித்தாள் சரஸ்வதி. அது என்ன வேலை? அச்வபதி மன்னர் வேதத்திலும் கலைகளிலும் மிகுந்த திறமைசாலி என்பதால், போன ஜென்மத்தின் பலாபலன்களைக் கண்டறியும் சக்தி அவருக்கு உண்டு. பிரச்னை என்று தன்னை நாடி வருபவர்களுக்கு, அவரவர் பூர்வ ஜென்மத்தையும், அதனால் ஏற்படும் சுக துக்கங்களையும் உணர்ந்து இன்னது செய்யலாம், இன்னது செய்யக் கூடாது என்று சொல்லி நல்வழி காட்டுவார். இதுதான் வைச்வானர வித்தை. அதனால் அரசர்கள் பலர் வந்து தங்கள் அல்லல்களைத் தீர்த்துக் கொண்டு போவார்கள்.

இந்த வேலையைத்தான் சரஸ்வதியும் செய்ய ஆரம்பித்தாள். அடுத்தவர் குறை தீர்க்கும் பணியை சரஸ்வதி செய்யட்டும். அவளைத் தேடி அயோத்தி மன்னர் வரப் போகிறார். நாம் அவரிடம் போகலாம். அயோத்தி மன்னர் தசரதருக்குக் குழந்தை இல்லை, ம்...! இதற்கு என்ன செய்யலாம்? சரி! நாமும் கேகய மன்னர் அச்வபதியிடம் போய் வழி கேட்க வேண்டியதுதான்! என்று தீர்மானித்த தசரதர், கேகய நாட்டுக்குக் கிளம்பினார். தசரதரை வரவேற்றாள் சரஸ்வதி. மன்னா! என்ன காரியமாக வந்தீர்கள்? என்றாள். பெண்ணே! மழலைச் செல்வம் இல்லாத மனக்குறைதான் எனக்கு. அதற்காக அச்வபதியைப் பார்க்க வந்தேன் என்றார் தசரதர்.

சரஸ்வதி வழி சொன்னாள். அதில் தசரதரின் பூர்வ ஜென்ம வரலாறே இருந்தது. தசரதர் திகைத்தார். மன்னா! போன பிறவியில் நீங்கள், உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரிய பகவானாக இருந்தீர்கள். காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி என மூன்று மனைவிகள் இருந்தார்கள். நீங்கள் இந்தப் பிறவியில் தசரதராகப் பிறந்திருக்கிறீர்கள். உங்கள் மூன்று மனைவியரும் இந்தப் பிறவியிலும் உங்களை மணந்து கொள்வதற்காக அரசிகளாகப் பிறந்திருக்கிறார்கள். அதில் காயத்ரிதான் உங்கள் முதல் மனைவி கௌசல்யாதேவி. சாவித்ரி. சுமித்ராதேவி. நான் சரஸ்வதி. நீங்கள் என்னையும் மணம் செய்து கொண்டால், உங்கள் தோஷங்கள் நீங்கும். மேலும், சாட்சாத் மஹாவிஷ்ணுவே உங்கள் பரம்பரை பூஜா விக்கிரமாக ஸ்ரீரங்கநாதர் என்ற பெயரில் விளங்கி வருகிறார். அவரை பூஜை செய்யுங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். திருமணம் குறித்து  என் தந்தையிடம் பேசுங்கள்! என்றாள். மனக் கவலை தீர மருந்தைத் தெரிந்து கொண்ட தசரதர், அச்வபதி மன்னரைச் சந்தித்தார். நடந்ததை விவரித்தார். அச்வபதியும் ஒப்புக் கொண்டார். சரஸ்வதிக்கும் தசரதருக்கும் திருமணம் நடந்தது. இந்த சரஸ்வதி, கேகய இளவரசி என்பதால் கைகேயி என அழைக்கப்பட்டாள்.

கைகேயியின் உயர்ந்த உள்ளம்!

தசரதனின் மூன்று மனைவியரில் இளையவள், கைகேயி. அழகே உருவானவள். வீரமும் விவேகமும் கொண்டவள். தன் அன்பாலும் பாசத்தாலும் தசரதன் உள்ளத்தில் மட்டும் அல்லாமல், அனைவரின் உள்ளத்திலும் இடம்பெற்றவள். எல்லாவற்றுக்கும் மேலாக, தன் மகன் பரதனிடத்தில் காட்டும் அன்பையும், பரிவையும்விட, ராமனிடம் அவள் அதிக அளவு அன்பும் பாசமும் கொண்டிருப்பதை நினைத்துப் பெரிதும் மகிழ்ந்தான் தசரதன். ஆகவே, அவளிடம் அதிக மதிப்பு வைத்திருந்தான் தசரதன். இத்தனை உண்மைகளுக்கு நடுவில், ஒரே இரவில் அவள் மனம் மாறி, ராமனுக்குப் பதிலாக என் மகன் பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்றும், 14 வருடங்கள் ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும் தசரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றாள் கைகேயி. ராமனுக்கு மட்டுமின்றி, தன் மகன் பரதனுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு கொடிய செயலை கைகேயி செய்திருப்பாளா என நினைத்துப் பார்த்தால், அதை மனம் ஏற்கவில்லை. மந்தரை என்றொரு கூனி. கைகேயியின் தாதியாக இருந்தவள். அவளிடம் அரை மணி நேரம் பேசியதன் விளைவு... விவேகம் மிக்க கைகேயி மனம் மாறி, ராமனைக் காட்டுக்கு அனுப்ப விரும்பினாள் என்பது உண்மையானால், அவளது கதாபாத்திரத்தின் உயர்வே அழிந்துவிடும்

ஏதோ பேராசையின் காரணமாகத் தன் மகனுக்கு அரசு பதவி தேடித் தரவேண்டும் என்று விரும்பி, அதன் பொருட்டு, கைகேயி தசரதனிடம் வரம் கேட்டிருக்கலாம்; வாதாடி பரதனுக்கு முடிசூட்ட நினைத்திருக்கலாம் என்பதையாவது ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளலாம். ஆனால், பிரியத்துக்குகந்த ராமனைக் காட்டுக்கு அனுப்பும்படி சொல்ல, அந்தத் தாய்க்கு எப்படி மனம் வந்திருக்கும்? கைகேயி எத்தகையவள் என்பதை விளக்கும் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. சம்பராசுரன் என்ற அசுரனுடன் தசரதன் ஒருமுறை போர் புரிந்தான். அப்போது, அவனுடைய தேருக்குச் சாரதியாக இருந்தாள் வீராங்கனை கைகேயி. தேரின் அச்சு முறிந்த நிலையில், தன் விரலையே அச்சாணியாகக் கொடுத்து, தன்னுயிரைப் பணயம் வைத்து, தசரதன் உயிரைக் காத்தாள்.

கைகேயி ரதத்தின் கடையாணிக்கு தன் விரலை எப்படி பயன்படுத்தினாள் என்பது தெரியுமா?

ரதத்தின் கடையாணிக்கு பதிலாக, ஆள்காட்டி விரலை கடையாணியாக பயன்படுத்த ¬முடியுமா என்றால், ¬முடியும். ஏனெனில், அந்த விரல் மட்டும் இரும்பு விரலாக இருந்தது. ஒரு சமயம், தசரதரின் அரண்மனையில் துர்வாசர் தங்கியிருந்த போது, அவருக்கு பணி விடை செய்தாள் கைகேயி. துர்வாசருக்கு அடிக்கடி கோபம் வரும்; சாபம் கொடுத்து விடுவார். துர்வாசர் இப்படி கோபம் கொண்டு சாபம் கொடுப்பது வழக்கம். அவருக்கு ஒரு வரம் இருந்தது. அவர் சாபமிட்டால் அவரது தவம் கூடுதலாகுமாம். அதனால், அவர் எப்போதுமே யாரையாவது சாபமிடுவது வழக்கம்.

தசரதருடைய அரண்மனையில் துர்வாசர் தங்கிவிட்டுப் போகும் போது, பக்கத்திலுள்ள தோழிகளிடம், அதோ போகிறாரே, அவர்தான் துர்வாசர்... என்று, தன் ஆள்காட்டி விரலால் காண்பித்தாள் கைகேயி. இதை பார்த்த துர்வாசர், அந்த ஆள் காட்டி விரல் இரும்பாகப் போகட்டும்... என்று சாபம் கொடுத்தார். கைகேயின் ஆள்காட்டி விரல் மட்டும் இரும்பாக மாறியது. ஆனால், அதுவே நன்மையாக ¬முடிந்தது. தசரதரின் ரதத்திலிருந்த கடையாணி ஒடிந்த போது, தன் ஆள்காட்டி விரலையே கடையாணியாக பயன்படுத்தி ரதத்தை ஓட்டினாள் கைகேயி.

அவளின் பதிபக்தி மற்றும் தியாகத்தில் சிலிர்த்த தசரதன், இரண்டு வரங்களை அவளுக்கு அளித்தான். பேராசைக்காரியாக அவள் இருந்திருந்தால்... தானே பட்ட மகிஷியாக வேண்டும் என்றும், தனக்குப் பிறக்கும் குழந்தைக்கே முடிசூட்ட வேண்டும் என்றும் அப்போதே வரம் கேட்டிருக்கலாம். ஆனால், அவள் அப்படிச் செய்யவில்லை. கணவனுக்குச் செய்த சேவை, தன் கடமைதானே என்று உணர்ந்து, வரங்கள் இப்போது வேண்டாம். தேவைப்பட்டால் பின்பு எப்போதாவது கேட்டுப் பெற்றுக்கொள்கிறேன் என்று பெருந்தன்மையாகக் கூறிவிட்டாள். அப்படிப்பட்டவளா இந்தக் கொடிய வரங்களைக் கேட்டிருப்பாள்?

ஆராய்ந்து பார்த்தால், இதற்கு ஏதோவொரு மூல காரணம் இருந்திருக்க வேண்டும், அதற்குப் பின்னே எவரும் அறியாத சம்பவங்கள் சில புதைந்து கிடக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு முறை தசரதன் வேட்டையாடச் சென்றபோது, தடாகம் ஒன்றில் தண்ணீர் முகந்து செல்ல வந்திருந்த சிறுவன் சிரவணகுமாரன் என்பவன் மீது, தெரியாமல் அம்பு எய்திவிட்டான். கமண்டலத்தில் தண்ணீர் முகந்த சப்தம், யானை தண்ணீர் குடிப்பது போலக் கேட்டது. அதனால் தூரத்திலிருந்து தசரதன் எய்த சப்தவேதி என்ற பாணம், ஒலி வந்த திக்கை நோக்கிச் சென்று, சிறுவன் உயிரைப் போக்கிவிட்டது. உயிர் துறக்குமுன் அந்தச் சிறுவன் வேண்டிக்கொண்டது போல, அவன் சடலத்தை எடுத்துக்கொண்டு, கண்ணில்லாத அவனுடைய வயோதிகத் தாய் -தந்தையிடம் சென்று, நடந்ததைக் கூறினான் தசரதன். மகனை இழந்த துயரத்தில் அந்தப் பெற்றோர் தசரதனுக்குக் கடும் சாபமிட்டுவிட்டு, உயிர் துறந்தனர். எங்களைப் போலவே புத்திரனைப் பிரிந்து, அந்தச் சோகத்தில் நீ உயிர் துறப்பாய் என்பதே அந்தச் சாபம். தசரதன் உள்ளத்தைக் கரையான் போல் அரித்துக் கொண்டிருந்த சம்பவம் இது.

வேட்டைக்குச் சென்று திரும்பிய தசரதன், சொல்லவும் மெல்லவும் முடியாமல், கலங்கித் தவித்ததை தனது விவேகத்தால் ஊகித்த கைகேயி, தசரதனின் தேர்ப் பாகன், அந்தரங்கக் காவலன் ஆகியோரைக் கூப்பிட்டு, சாமர்த்தியமாக விசாரித்து, நடந்த உண்மைகளை ஓரளவு தெரிந்துகொண்டாள்; சாபம் பற்றிய உண்மை தெரிந்து கைகேயி பதறினாள்; துடித்தாள். புத்திரன் எனப் பொதுப்படையாகவே குறிப்பிட்டதால், அது தசரதன் பெற்ற புதல்வர்களில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், இதன் உண்மைகளை இன்னும் ஆராய்ந்து அறிய விரும்பினாள் கைகேயி. அந்தரங்கமாக, ஆஸ்தான ஜோதிடர்களை அழைத்தாள். தசரதனின் ஜாதகத்தையும், குழந்தைகளின் ஜாதகத்தையும் கொடுத்து ஆராயச் சொன்னாள். பொதுவாக, விண்ணில் உள்ள கிரகங்களது அமைப்பின்படி, நாட்டின் நிலை குறித்தும் விளக்கப் பணித்தாள். அந்தக் கால கட்டத்தின்படி, கிரக நிலைப்படி, அயோத்தி சிம்மாசனத்தில் எவர் அமர்ந்தாலும், அவர்கள் சில நாட்களில் மரணம் அடைய நேரும் என ஜோதிடர்கள் கூறினார்கள்.

புத்திரனைப் பிரிந்து என்கிற சாபம் புத்திரன் இறந்து என்கிற அர்த்தத்தில் இடப்பட்டாலும், இது குறித்து சாஸ்திர விற்பன்னர்கள் மற்றொரு விளக்கமும் பரிகாரமும் சொன்னார்கள். ஒருவேளை, புத்திரன் தந்தையை விட்டு வெகுதூரம் பிரிந்து சென்றுவிட்டால், அதனால் புத்திரன் உயிர் பிழைத்துவிடுவான்; தந்தை மட்டும் அந்தப் பிரிவால் உயிர் துறக்க நேரிடும் எனும் விளக்கம், ஜோதிட பண்டிதர்களால் தரப்பட்டது. ஆக, தசரதன் உயிர் துறப்பது சாபத்தால் ஏற்பட்ட, தவிர்க்க முடியாத நியதி எனும் உண்மையை உணர்ந்தாள் கைகேயி. அதே நேரம், மைந்தன் ஸ்ரீராமனையாவது காப்பாற்றியாக வேண்டும் என நினைத்தாள். மனைவியின் கடமையைவிட, தாய்மையின் அன்புதான் அங்கே தலை தூக்கி நின்றது. ஸ்ரீராமனை மட்டும் தசரதனிடமிருந்து பிரிக்க நினைத்தால், அதற்குச் சரியான காரணம் காட்ட வேண்டுமே? அதற்காகத் தியாகமும் அன்பும் உருவான அந்தத் தாய், தன்னை இந்த உலகம் பேராசைப் பேய் என்று நிந்தித்தாலும் பரவாயில்லை என மனத்தை திடப்படுத்திக் கொண்டு, ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள். பரதனுக்கு முடிசூட்ட வேண்டினாள்; அதற்குத் தடையில்லாதபடி, ஸ்ரீராமனை காட்டுக்கு அனுப்பச் சொல்வது போல் இருக்கட்டும் என முடிவு செய்தாள். அப்படியே வரமும் கேட்டாள். அது மட்டுமா? ஒருவேளை, சக்கரவர்த்தியாக தசரதனே தொடர்ந்து நீடித்தால், ஜோதிடப்படி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மன்னன் உயிர் துறக்க நேரிடுமே? அதையும் எப்படியாவது தடுத்துவிட முடியாதா என ஏங்கினாள். எனவே, கணவனையும் ஸ்ரீராமனையும் காப்பதற்குத் தன் மகனைத் தியாகம் செய்யத் துணிந்தாள். ஆகவே, பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வலியுறுத்தினாள்.

பரதனுக்கு முடிசூட்டிவிடுகிறேன். ஆனால், ஸ்ரீராமனை காட்டுக்கு அனுப்ப வேண்டாமே எனக் கெஞ்சினான் தசரதன். ஆனால், கைகேயியோ பிடிவாதமாக இருந்தாள். ஸ்ரீராமன், அவளுக்கு மட்டும் குழந்தை அல்ல; அயோத்தியின் குழந்தை. அவன் அவதாரப் பணி நிறைவேற வேண்டும். ராவணனைப் போன்ற அரக்கர்களை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட அவதரித்தவன் ஸ்ரீராமன்! ஆகவே, அவன் காக்கப்பட வேண்டும். எனவே, விதிப்படி தனக்கு இடப்பட்ட பணியைச் செய்தாள் கைகேயி. பாவி கைகேயி சதி செய்து விட்டாளே! என்று எல்லோரும் அவளை நிந்தித்தனர். சீதையும் லட்சுமணனும் பின் தொடர, மரவுரி தரித்து, அயோத்தியை விட்டு ஸ்ரீராமன் தவக் கோலத்தில் கானகம் புறப்பட்டான். அவனைக் காட்டில் விட்டுவர, ஒரு ரதம் புறப்பட்டது. அந்த ரதம், வீதியில் நகர முடியாதபடி மக்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டு, அழுது புலம்பியது. ஊரே அழுது கொண்டிருந்தது. ஒருத்தியின் மனதில் மட்டும் ஸ்ரீராமனைக் காப்பாற்றிவிட்ட பெருமிதம் நிலைத்திருந்தது. அவள் கண்களிலிருந்தும் கண்ணீர் சிந்தியது. அது ராமனுக்காக அல்ல; புத்திர சோகத்தால் உயிர் நீத்து, தன்னை நிரந்தரமாகப் பிரியப் போகும் கணவன் தசரதனுக்காக!

ஸ்ரீராமன், அவதாரப் பணியைத் தொடங்கி விட்டான்; ராவணன் அழிவான்; துயர் தீரும் நேரம் வந்துவிட்டது என தேவர்களெல்லாம் பூமாரிப் பொழிந்தனர். அரக்கர்கள் அழிந்து, ராமனால் நல்லோர் காக்கப்படுவர் என்பதால், அவனைக் காட்டுக்கு அனுப்பிய கைகேயியை அவர்கள் மனதார, மானசிகமாக வாழ்த்தினர். ஊரார் பழித்தனர்; உலகோர் நிந்தித்தனர்; பெற்ற மகன் பரதனோ, தாயின் தியாகம் தெரியாமல், அவளை வெறுத்தான். ஏசினான். ஆனால் ஸ்ரீராமனுக்கு மட்டும் தன் அன்புத் தாய் கைகேயி செய்த தியாகம் தெரியும். ஆரண்ய முனிவர்களுக்கெல்லாம் அவள் பெருமை தெரியும். தேவர்களுக்கெல்லாம் அவள் செய்த உதவி புரியும்!

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar