முருகன் என்பதற்கு ‘அழகு’ என்பது பொருள். கடல் பரப்பில் இளஞ்சூரியன் தோன்றுவதை வழிபட்டு பரவசம் கண்டவர்கள் நம் முன்னோர்கள். செக்கச் சேவேல் என்றிருந்த சூரியன் உதயமாகும் நீலக்கடலின் அழகில் ஈடுபட்ட தமிழர்கள், ‘முருகு’ என்று சொல்லி மகிழ்ந்தனர். முருகனின் வாகனம் மயில் நீலநிறத்துடன் இருக்கும். முருகனையும் சிவந்தவன் என்னும் பொருளில் சேயோன், செவ்வேள் என்றெல்லாம் குறிப்பிடுவர். காலப்போக்கில் சூரியன் மட்டுமில்லாமல் மலை, காடு, அருவி என்று இயற்கை அழகுக் காட்சிகளெல்லாம் முருகனாக போற்றி வழிபட்டனர். இதையே ‘அழகெல்லாம் முருகனே’ என்று தமிழ் போற்றுகிறது.