திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லுார் கிருஷ்ணாபுரம் அனுமனுக்கு பக்தர்கள் படிபாயாசம் படைத்து வழிபடுகின்றனர். ராவணனால் கடத்தப்பட்ட சீதையைத் தேடி அனுமன் தென்திசை நோக்கி புறப்பட்டார். வழியில் களைப்பு தீர குகை ஒன்றில் தங்கினார். அங்கிருந்த தண்ணீரை பருகி தாகம் தீர்த்துக் கொண்டார். அங்கிருந்த சுயம்பிரபை என்னும் தேவலோக பெண் மூலம் அந்த தண்ணீர் கங்கை போல புனிதமான தீர்த்தம் என்றும் அதில் நீராடியதால் இந்திரனுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் பாவ விமோசனம் கிடைத்ததாகவும் அறிந்தார். ராமரின் சேவகனான அனுமன் வரும் போது, இத்தீர்த்தத்தைக் காக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தேவலோகம் திரும்புமாறு இந்திரன் தனக்கு கட்டளையிட்டுள்ளதாகவும் தெரிவித்தாள். அதைக் கேட்ட அனுமன், தான் சீதையைக் கண்டுபிடித்து ராமரிடம் ஒப்படைத்தபின்னரே அப்பொறுப்பை ஏற்க முடியும் என்றார். அதன்படியே ராவண வதம் முடிந்து திரும்பும் போது அனுமன் குகையில் சுயம்பிரபை சந்தித்ததையும், தீர்த்தக்கரையில் தங்க இருப்பதையும் தெரிவிக்க ராமரும் சம்மதித்தார். அயோத்தியில் ராம பட்டாபிஷேகம் முடிந்த பிறகு இங்கு வந்த அனுமன் தீர்த்தத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்றார். இதனடிப்படையில் அனுமன் கோயில் எழுப்பப்பட்டது. சுவாமிக்கு அபயஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் என்று பெயர். ஆறடி உயரம் கொண்ட இவர் சுயம்பு மூர்த்தியாக தெற்கு நோக்கி உள்ளார். சன்னதிக்கு எதிரில் சுயம்பிரபை தீர்த்தமும், அருகில் குகையும் உள்ளது. மழைக்காலத்தில் குளத்தில் தண்ணீர் இருக்கும். அனுமன் ஜெயந்தியன்று குகை முன் சிறப்பு பூஜை நடக்கும். குழந்தைப்பேறு உள்ளிட்ட பிரார்த்தனை நிறைவேற அனுமனுக்கு படிபாயாசம் படைப்பதாக நேர்ச்சை செய்கின்றனர். இதற்காக தீர்த்தக்கரையில் உள்ள படியில் பிரசாத பாயாசத்தை ஊற்றி சாப்பிடுகின்றனர். பிரச்னை தீரவும், வழக்கில் வெற்றி பெறவும் வெற்றிலை, வடை மாலை சாத்துகின்றனர். பிரகாரத்தில் வன்னி மரவிநாயகர், சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் உள்ளன. சனிக்கிழமைகளில் முத்தங்கி அல்லது வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். அனுமன் ஜெயந்தி விழாவில் லட்சார்ச்சனை சிறப்பாக நடக்கும். எப்படி செல்வது: மதுரையில் இருந்து 145 கி.மீ., விசேஷ நாட்கள்: தமிழ் புத்தாண்டு, அனுமன் ஜெயந்தி, ஸ்ரீராமநவமி நேரம்: காலை 8:30 11:00 மணி, மாலை 5:00 மணி இரவு 7:30 மணி, சனிக்கிழமை காலை 8:30 – இரவு 9:00 மணி தொடர்புக்கு: 04633 – 245 250, 98429 40464 அருகிலுள்ள தலம்: குற்றாலம் குற்றாலநாதர் கோயில் (23 கி.மீ.,) நேரம்: காலை 6:00 – 12:00 மணி, மாலை 4:00 மணி இரவு 7:30 மணி, தொடர்புக்கு: 04633 – 283 138, 210 138